எப்பொழுதுமே பரிகார பூஜைகள் செய்வதற்கு முன்னதாக பித்துருக்கள் வழிபாடு, குலதெய்வம், பிள்ளையார் என வணங்கி பின்னர் பரிகார கடவுள் வழிபாடு என்பதே சரியாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். குறிப்பாக பரிகார தலங்களுக்கு செல்லும் போது அதிகாலையில் பூஜை செய்திட வேண்டும் என்பதால் முதல் நாள் இரவே அங்கு சென்று விடுவது நல்லது. கோவில்களுக்கு அருகில் இருக்க கூடிய சத்திரங்களோ அல்லது விடுதிகளிலோ தங்குவது நல்லது. எந்தவொரு பரிகாரமாக இருந்தாலும் அதனை குடும்பத்துடன் செய்வதே நல்லது. அதோடு குடும்பத்தில் உள்ள பெண்கள் மாதவிடாய் காலத்தில் செல்வதை தடுக்க வேண்டும். மாதவிடாய் முடிந்தாலும் கூட ஏழு நாட்கள் கழித்தே பரிகாரம் செய்திட வேண்டும்.
முக்கியமாக பரிகாரம் செய்வதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக அசைவ உணவுகளை உண்பதை தவிர்த்திட வேண்டும். அதேபோன்று பரிகாரம் முடிந்த பின்னரும் இரண்டு தினங்களுக்கு அசைவ உணவுகளை தவிர்த்திட வேண்டும். அதுமட்டுமின்றி ஆண்கள் மது அருந்த கூடாது. கணவன் மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபட கூடாது. மேலும் பரிகார வழிபாட்டிற்கு முன்பு குலதெய்வ வழிபாடு என்பது பலனளிக்க கூடும்.
எல்லோரின் குடும்பத்திலும் பொருளாதார நெருக்கடிகள் இருக்கும். ஆனால் பரிகாரத்திற்கு செல்லும் பொது யாரிடமும் கடன் பெற்று செல்லக்கூடாது. அதோடு பரிகாரம் செய்வதற்காக சென்றால் பரிகார தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். அருகில் இருக்கும் கோவிலுக்கோ, புண்ணியம் தரும் பிரதான கோவிலாக இருந்தாலும் அங்கு செல்லக்கூடாது. இதன் காரணமாக கூட பரிகாரத்திற்கான பலன் தாமதமாக கிடைக்கலாம்.