Spiritual Tour: ஒரே நாளில் 6 முருகன் கோயில் தரிசனம்! வெளியான சூப்பர் அறிவிப்பு! எந்தெந்த நாட்களில்?

First Published Oct 4, 2024, 9:21 AM IST

One Day Tour Package: தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 6 அருள்மிகு முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் சிறப்பு சுற்றுலா பேருந்தை விரைவில் இயக்க உள்ளது. இந்த சேவை வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2024 அக்டோபர் 3வது வாரம் முதல் துவங்கப்பட உள்ளது.

தமிழக அரசு சார்பாக அறநிலையத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ஆயிரக்கணக்கான கோவிக்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அன்னதானம் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுவாவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்  6 அருள்மிகு முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் 6 அருள்மிகு முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து 2024 அக்டோபர் 3வது வாரம் முதல் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விரைவில் துவங்கப்படவுள்ள இச்சிறப்பு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கம் தொடர்பாக அறநிலையத்துறை மற்றும் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு இடையேயான ஆலோசனை கூட்டம் நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தலைமையில் நடைபெற்றது. 

Latest Videos


ஆலோசனை கூட்டத்தில் நிர்வாக இயக்குனர் பேசுகையில்: பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்கவும், போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின்படியும் இச்சிறப்பு பேருந்து விரைவில் இயக்கப்படவுள்ளது. சிறப்பு சுற்றுலா பேருந்து கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (திருவாரூர் மாவட்டம்), சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலன் ஆலயம், பொரவச்சேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோவில், எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம்) ஏரகரம் ஆதி சுவாமிநாதசுவாமி திருக்கோவில், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் ஆகிய ஆறு கோவில்களையும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ஆறுமுருகன் திருத்தலம் சுற்றுலா பேருந்து இயக்கப்படவுள்ளது. 

அறநிலையத்துறை அலுவலர்கள் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக குடிநீர் வசதி, கழிவறை வசதி முக்கிய பண்டிகை மற்றும் விழா நாட்களில் முன்னுரிமை அளித்து எந்த சிரமமும் இன்றி தரிசனம் செய்து திரும்பும் வகையில் தேவையான வசதிகளை செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. போக்குவரத்துத்துறை அலுவலர்கள் பேருந்தை சிறப்பு முறையில் பராமரித்து குறித்த நேரத்தில் இயக்கி காலதாமதம் இல்லாமல் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும். அறநிலையத்துறை அலுவலர்களுடன் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து தேவைப்படும் வசதிகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. 

முன்பதிவு தொடர்பான விளம்பரங்களை பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் திருக்கோவில்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பார்வையிடுகின்ற வகையில் வைக்க வேண்டும். பத்திரிக்கைகள், தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் மூலமாகவும், இச்சிறப்பு  பேருந்து இயக்கம் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பயணம் செய்யக்கூடிய பயணிகளின் பெயர், அலைபேசி எண்களை சேகரித்து அவர்களுக்கு தேவையான விபரங்கள் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க போக்குவரத்துத்துறை அலுவலர்கள் நடவக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் இயக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அறிவிப்பிற்கு பின் அருள்மிகு முருகன் கோவில்களுக்கு சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் கீழ்கண்ட இணையதள முகவரியில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அருள்மிகு முருகன் கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து வசதியினை இணையத்தளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள இயலும். நேரடியாக பேருந்தில் பயண சீட்டு பெற்றுக் கொள்ள இயலாது என நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார். எந்த வித சிரமமின்றி பயணிக்க மொபைல் ஆப் www.instc.in (Mobile App) Android/I phone 6 கைப்பேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!