
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன், துஷாரா விஜயன், பிரியாமணி, ஜெயராம், சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ஜி.டி.என். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பள்ளிப் பாடப்புத்தகத்தில் ஜி.டி. நாயுடுவின் பெயரை சேர்க்க வேண்டுமா என்ற விவாதத்துடன் படம் தொடங்குகிறது. அங்கிருந்து காலத்தைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் திரைக்கதை, கோவையில் சாதாரண ஓட்டலில் வேலை பார்த்த இளைஞரான நாயுடு, ஒரு ஆங்கிலேயரிடமிருந்து மோட்டார் சைக்கிளை வாங்கி, அதன் செயல்முறையை தானாகவே கற்றுக்கொண்டு கண்டுபிடிப்பாளராக உருவெடுக்கும் பயணத்தை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது.
பின்னர் போக்குவரத்து துறையில் பல நிறுவனங்களை ஒருங்கிணைத்து யு.எம்.எஸ். என்ற பேருந்து சேவையை உருவாக்குவது, காலத்தை முந்திய பல புதுமைகளை அறிமுகப்படுத்துவது, தொழில்முனைவோராக உயர்வது என அவரது சாதனைகள் திரையில் விரிகின்றன. ஆனால் அதே ஆங்கிலேயர் வரித்துறை அதிகாரியாக திரும்பி வந்து அவரது வளர்ச்சிக்கு தடையாக மாறுவது கதைக்கு விறுவிறுப்பை சேர்க்கிறது. வரித்துறை வழக்குகள், அரசியல் மற்றும் சமூக எதிர்ப்புகள், உலகப் போரின் தாக்கம், இறுதியில் சொத்துக்கள் ஏலத்திற்கு செல்லும் நிலை வரை அவரது வாழ்க்கைப் போராட்டங்களை படம் உணர்வுப்பூர்வமாக எடுத்துக்காட்டுகிறது.
மொழி சர்ச்சை விவகாரம்; வில்லங்கமான கேள்விக்கு மாதவன் அளித்த ‘நச்’ பதில்
இந்த வரலாற்று நாயகனாக நடித்திருக்கும் ஆர். மாதவன், தனது திரைப் பயணத்தில் மறக்க முடியாத இன்னொரு கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். இளமைக் கால துடிப்பிலிருந்து முதியவரின் முதிர்ச்சிவரை உடல்மொழி, முகபாவனை, குரல் மாறுபாடு என ஒவ்வொரு கட்டத்தையும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். கண்டுபிடிப்பாளரின் ஆர்வம், தொழில்முனைவோரின் தைரியம், தோல்விகளை எதிர்கொள்ளும் மன உறுதி என பல பரிமாணங்களை தனது நடிப்பில் உயிர்ப்பித்துள்ளார். குறிப்பாக நீதிமன்றக் காட்சிகளிலும் வரித்துறை அதிகாரியுடனான மோதல்களிலும் அவரது நடிப்பு படத்தின் முக்கிய பலமாக மாறுகிறது.
நாயுடுவின் முதல் மனைவியாக நடித்துள்ள பிரியாமணி, அமைதியான நடிப்பின் மூலம் குடும்ப உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்துகிறார். இரண்டாவது மனைவியாக வரும் துஷாரா விஜயன், கணவரின் கடினமான சூழ்நிலைகளில் உறுதுணையாக நிற்கும் பெண்ணின் பாத்திரத்தை இயல்பாக ஏற்று நடித்துள்ளார்.
வரித்துறை அதிகாரியாக ஜெயராம், கட்டுப்பாடும் கம்பீரமும் கலந்த நடிப்பால் கதாநாயகனுக்கு வலுவான எதிரியாக திகழ்கிறார். ராமையா பிள்ளை கதாபாத்திரத்தில் சத்யராஜ், தனது அனுபவமிக்க நடிப்பாலும் இயல்பான நகைச்சுவையாலும் கதைக்கு உயிரூட்டுகிறார்.
எப்போதும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கும் கருணாகரன், இந்த முறை எதிர்மறை வேடத்தில் புதிய முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிதி பாலன், வினய் ராய், மோகன் ராமன், தேஜீந்தன் அருணாசலம், தம்பி ராமையா, பிரிகிடா சாகா, ஷீலா ராஜ்குமார், ஷில்பா ஸ்ரீகுமார் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, காலகட்டத்தின் உணர்வுகளை உயிர்ப்பிக்கிறது. பாடல்களும் கதையின் ஓட்டத்துடன் இயல்பாக இணைகின்றன. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன், பழைய கோவையின் தோற்றத்தை கண்முன் நிறுத்தும் வகையில் நேர்த்தியான காட்சிகளை உருவாக்கியுள்ளார். படத்தொகுப்பு வேகமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சில பகுதிகளை இன்னும் சுருக்கியிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், ஜி.டி. நாயுடுவின் சாதனைகளை மட்டும் கொண்டாடாமல், அவரது தோல்விகள், போராட்டங்கள், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக எதிர்ப்புகளையும் சமநிலையுடன் பதிவு செய்துள்ளார்.
வரலாற்றை ஆவணப்பட பாணியில் அல்லாமல், சுவாரஸ்யமான திரைக்கதையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில், இந்தியாவின் மறக்கப்பட்ட தொழில்நுட்ப மேதையான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாகவும், பிரம்மாண்டமாகவும் திரையில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கும் இந்தப் படம், ஆர். மாதவனின் அர்ப்பணிப்பான நடிப்பால் மேலும் உயர்ந்து, குடும்பத்தோடு பார்க்கக்கூடிய தரமான வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக திகழ்கிறது.