வன்னியர்களின் 10.5% இடஒதுக்கீடு..! எடப்பாடியை குறிவைக்கும் ஓபிஎஸ்..! திமுகவின் மாஸ்டர் பிளான்!

Published : Mar 10, 2026, 11:48 AM IST

தன் சொந்த மண்ணிலேயே கூட்டத்தை கூட்ட முடியாத ஒருவர், திமுகவிற்கு எப்படி வாக்குகளைப் பெற்றுத் தருவார் என்ற கேள்வி கட்சிக்குள் பலமாக ஒலிக்கிறது.

PREV
14
ஓ.பி.எஸ் பலமா? பாரமா?

ஒருகாலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நிழலாகவும், அதிமுகவின் முகமாகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், இன்று திமுகவின் அரசியல் வியூகங்களுக்குள் ஒரு அங்கமாக மாறியிருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ஆனால், இந்த இணைப்பை தென்மாவட்ட உடன்பிறப்புகள் பலமாக பார்க்காமல், ஒரு பாரமாகவே கருதுகிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

24
வன்னியர் இடஒதுக்கீடு: திமுகவின் பிரம்மாஸ்திரம்

அறிவாலயம் ஓ.பி.எஸ்-ஐ அரவணைப்பதற்குக் பின்னால் ஒரு தெளிவான கணக்கு இருக்கிறது. அது 10.5% வன்னியர் இடஒதுக்கீடு. "நான் எவ்வளவோ தடுத்தும் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் அதைச் செயல்படுத்துவார். அதை சொல்லித்தான் அன்புமணியை கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளார்" என முக்குலத்தோர் சமூக மக்களிடம் ஓ.பி.எஸ் பேசினால், அது அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தும் என திமுக நம்புகிறது. பாமக உடனான அதிமுகவின் கூட்டணி இந்த வாதத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பார்கள். ஆனால் ஓ.பி.எஸ் - திமுக கூட்டணி என்பது கொள்கை சார்ந்ததல்ல, அது முழுக்க முழுக்க 'எடப்பாடி எதிர்ப்பு' என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்திருக்கிறது.

34
முக்குலத்தோரின் அமைச்சர் பதவிகள்

திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய அச்சம், ஆட்சி அதிகாரம் தொடர்பான பகிர்வுதான். ஏற்கனவே திமுக அமைச்சரவையில் ஐ.பெரியசாமி, மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா என முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த 5 பலமான அமைச்சர்கள் உள்ளனர்.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதில் ஓ.பி.எஸ்-யும் இணைத்துக் கொண்டால், அந்த எண்ணிக்கை 6-ஆக உயரும். இது மற்ற சமூகத்தினரிடையே அதிருப்தியை உண்டாக்கும் என்றும், தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிடுமோ என்ற கவலையும் உடன்பிறப்புகள் மத்தியில் எழுந்துள்ளது.

44
திமுகவின் திட்டம் பலிக்குமா?

மதுரை, திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஓ.பி.எஸ்-ஸின் தற்போதைய நிலைக்கு ஒரு சான்றாக அமைந்தது. முதல்வர் ஸ்டாலின் பிரம்மாண்டமாக நடத்தச் சொல்லியும், "என்னால் அவ்வளவு பெரிய கூட்டத்தை நடத்த முடியாது" என ஓ.பி.எஸ் கைவிரித்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இறுதியில் மதுரை அமைச்சர்கள்தான் அந்த பாரத்தைத் தாங்கி கூட்டத்தை நடத்திக் காட்டியுள்ளனர். தன் சொந்த மண்ணிலேயே கூட்டத்தை கூட்ட முடியாத ஒருவர், திமுகவிற்கு எப்படி வாக்குகளைப் பெற்றுத் தருவார் என்ற கேள்வி கட்சிக்குள் பலமாக ஒலிக்கிறது.

கடந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் பிரித்த வாக்குகளால் தென்மாவட்டங்களில் திமுக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் இன்று தினகரன் - எடப்பாடி கூட்டணி மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஓ.பி.எஸ்-ஐ வைத்து எடப்பாடியின் செல்வாக்கைக் குறைக்க நினைக்கும் திமுகவின் திட்டம் 'இரட்டை முனை கத்தி' போன்றது.

ஓ.பி.எஸ்-ஸின் பிரச்சாரம் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவிற்கு எதிராகத் திரும்பலாம். ஆனால், அதே சமயம் திமுகவின் உட்கட்சி பூசல்களையும், சமூக சமன்பாடு குறித்த கவலைகளையும் இது அதிகப்படுத்தியுள்ளது. ஓ.பி.எஸ் திமுகவிற்கு ஆக்ஸிஜனாக இருப்பாரா அல்லது கூடுதல் பாரமாக மாறுவாரா என்பதை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories