நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளார். இது 2026 தேர்தலில் சீமானுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும் என்றும், காரைக்குடியில் அவருக்கு எதிராக காளியம்மாள் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரு காலத்தில் ஒரு இயக்கத்தின் அடையாளமாக, அதன் கொள்கைப் பரப்புச் செயலாளராக, மேடைகளில் அனல் பறக்கப் பேசிய ஆளுமைகள், காலப்போக்கில் அதே இயக்கத்திற்கு சிம்மசொப்பனமாக மாறுவது திராவிட அரசியலில் வாடிக்கைதான். அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் 'நட்சத்திரப் பேச்சாளர்' காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைந்திருப்பது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஒரு மெகா 'செக்' ஆகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்தத் துல்லியமான நகர்வு, சீமானின் அரசியல் கோட்டைக்குள்ளேயே ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
25
திரைமறைவில் செயல்பட்ட ஓ.எஸ். மணியன்
காளியம்மாளை அதிமுகவிற்கு இழுக்கும் படலத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள், தனது ஆரம்பகால மீனவப் போராட்டங்களை அங்கேயே தொடங்கினார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க தலைவரான ஓ.எஸ். மணியன், காளியம்மாளின் அதிருப்தியை அறிந்து அவரோடு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். காளியம்மாளின் சமூகப் பின்னணி மற்றும் அவரது பேச்சாற்றல் அதிமுகவிற்குப் பெரிய பலம் தரும் என்பதை உணர்ந்த ஓ.எஸ். மணியன், அவரை எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் அழைத்துச் சென்று இந்த இணைப்பை உறுதி செய்துள்ளார். இது டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிமுகவிற்குப் புதிய உத்வேகத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
35
"தமிழன் தலைமையில் இணைந்துள்ளேன்!" - சீமானுக்கு சாட்டையடி
அதிமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த காளியம்மாள், சீமானின் பெயரைக் குறிப்பிடாமல் அவரைச் சாடினார். "ஒரு உண்மையான தமிழன் தலைமையில் இயங்க வேண்டும் என்றே நான் அதிமுகவில் இணைந்துள்ளேன். சாதாரண குடும்பத்தில் பிறந்த எடப்பாடியார் ஒரு மாநிலத்தின் முதல்வராக உயர்ந்தது அவரது உழைப்பிற்குச் சான்று. என்னை அதிமுகவிற்கு அழைத்து வந்து, எடப்பாடியாரின் கரங்களை வலுப்படுத்தக் கோரியவர் ஓ.எஸ். மணியன் அவர்கள்தான்," என வெளிப்படையாகக் கூறினார்.
2026 தேர்தலில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராகக் காளியம்மாளைக் களமிறக்க அதிமுக மேலிடம் ஆலோசித்து வருகிறது. மார்பில் பாயும் வளர்த்த கடா: சீமானால் பட்டை தீட்டப்பட்டு, மேடைப் பேச்சில் அவருக்கு நிகராக வளர்ந்த காளியம்மாள், இப்போது அவருக்கு எதிராகவே காரைக்குடியில் முழங்கினால் அது சீமானுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கும். வாக்கு வங்கி மாற்றம்: நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் ஒரு பகுதியை அதிமுக பக்கம் திருப்ப காளியம்மாள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவார்.
55
எடப்பாடியின் ராஜதந்திரம்
திமுகவை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், தங்களைச் சீண்டிப் பார்க்கும் நாம் தமிழர் கட்சிக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். காளியம்மாள் போன்ற ஒரு பெண் ஆளுமையை முன்னிறுத்துவதன் மூலம், பெண் வாக்காளர்கள் மற்றும் மீனவ சமூக வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய இபிஎஸ் (EPS) திட்டமிட்டுள்ளார். இந்த அரசியல் சதுரங்கத்தில், சீமான் தனது 'வளர்த்த கடா'விடமிருந்து தப்பிக்கப் போகிறாரா அல்லது புதிய வியூகம் அமைக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.