தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வரும் வேளையில், பொய்ச் செய்திகளும் வதந்திகளும் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை ஆளுங்கட்சியான திமுக-வின் தூக்கத்தைக் கெடுத்துள்ளதோ என்கிற ஐயத்தை அண்மைக்கால நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதனைப் பறைசாற்றும் விதமாக, தவெக-வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை, திமுக-வின் 'வதந்தி அரசியல்' முகத்திரையைக் கிழித்துள்ளது.
24
கூட்டணி பொய்கள் திட்டமிட்ட சதி
சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு திட்டமிட்ட செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதாவது, தமிழக வெற்றிக் கழகம், பாஜக அல்லது அதிமுக-வுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், திருமதி சசிகலா மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ் ஆகியோருடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் உலாவுகின்றன. இதனை முற்றிலுமாக மறுத்துள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார், இத்தகைய செய்திகள் "அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்கள்" எனச் சாடியுள்ளார். எந்தவொரு அரசியல் கட்சித் தலைவருடனும், எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
34
திமுக-வின் பழைய உத்தி..!
கடந்த காலங்களில் இதேபோன்ற உத்திகளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் தவெக-வைத் தொடர்புபடுத்தி வதந்திகளைப் பரப்பினர். அவை அனைத்தும் காலப்போக்கில் பொய் என்பது நிரூபணமானது. இப்போது மீண்டும் அதே பாணியில் வதந்திகளைப் பரப்புவது, பொதுமக்களிடையேயும் தவெக தொண்டர்களிடையேயும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவே என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, இந்த ஆதாரமற்ற செய்திகளுக்குப் பின்னால் திமுக-வினர் இருப்பதை அவர் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.
களத்தில் கொள்கை ரீதியாக மோதத் துணிவில்லாதவர்கள், குறுக்கு வழியில் ஒரு கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க முயல்வது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது. "வாய்மையே வெல்லும்" என்கிற வாசகத்தோடு, பொறுப்புள்ள ஊடகங்கள் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் வதந்திகளைப் பகிர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தனித்து நிற்கும் போக்கும், அதன் அதிரடி நகர்வுகளும் ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. இந்தச் சூழலில், கூட்டணி என்ற பெயரில் வதந்திகளைப் பரப்பி, ஒரு கட்சியின் நம்பகத்தன்மையைக் குறைக்க முயல்வது தமிழக அரசியலில் தரம் தாழ்ந்த செயலாகவே பார்க்கப்படுகிறது. சி.டி.ஆர். நிர்மல் குமாரின் இந்த அதிரடி அறிக்கை, வதந்திகளைப் பரப்பும் கும்பலுக்கு விழுந்த பலமான சவுக்கடியாகக் கருதப்படுகிறது.