Telegram Ban : நீட் (NEET-UG 2026) மறுதேர்வு நெருங்கி வரும் சூழலில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கவும், போலிச் செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் இந்திய அரசு அதிரடி நடவடிக்கையாக டெலிகிராம் (Telegram) செயலிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வை முன்னிட்டு, சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் வழியாகத் தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டதாகப் பரப்பப்படும் வதந்திகள் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, டெலிகிராம் செயலியில் உள்ள சில கும்பல்கள், போலியான வினாத்தாள்களைக் காட்டி மாணவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தன. இந்தச் சூழலைத் தவிர்க்கவே, தேசிய தேர்வு முகமையின் (NTA) பரிந்துரையின்படி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-ன் கீழ் இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது.
தடையின் கால அளவு
டெலிகிராம் செயலிக்குத் தடை: ஜூன் 22, 2026 வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி செயல்படாது. தேர்வு நாளையும், அதனைத் தொடர்ந்த சில நாட்களையும் கருத்தில் கொண்டே இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எடிட் (Edit) வசதிக்குத் தடை: டெலிகிராம் செயலியில் ஏற்கனவே பதிவிடப்பட்ட செய்திகளைத் திருத்தும் (Message editing) வசதி ஜூன் 30-ம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடந்த பிறகு வினாத்தாள்களைக் கையில் வைத்திருக்கும் மோசடிக் கும்பல்கள், பழைய செய்திகளை எடிட் செய்து, அதில் வினாத்தாளைப் பதிவேற்றி, அதன் நேரத்தைக் (timestamp) காட்டாமல் மாற்றுகிறார்கள். இதன் மூலம், தேர்வு நடப்பதற்கு முன்பே வினாத்தாள் தங்களிடம் இருந்ததாக மாணவர்களை நம்ப வைத்துப் பணம் பறிக்கிறார்கள். இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே 'எடிட்' வசதி முடக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் விளக்கம்
நிச்சயமாக எந்த ஒரு வினாத்தாளும் கசியவில்லை. இது முற்றிலும் மோசடி என NTA திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தடையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அதே வேளையில், தேர்வு நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளது.
மாணவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு மட்டுமே தேர்வு முகமையின் இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், இதுபோன்ற தேவையற்ற வதந்திகளைப் புறக்கணித்துத் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தேசிய சைபர் குற்றத் தடுப்பு உதவி எண் (1930) அல்லது NTA-வின் அதிகாரப்பூர்வ உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.