விமானப் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்த இண்டிகோ, மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து பயணிகளுக்கு ரூ.610 கோடியைத் திருப்பி அளித்துள்ளது.
விமானப் பணியாளர்கள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்த இண்டிகோ நிறுவனம், இதுவரை ரூ.610 கோடி டிக்கெட் கட்டணத்தை பயணிகளுக்குத் திருப்பி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
24
2,000+ விமானங்கள் ரத்து
விமானப் பணியாளர்களின் பணி நேரத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் சிரமத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால், கடந்த 5 நாட்களாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்கள் உட்பட கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.
34
கட்டணத்தைத் திருப்பி அளிக்க உத்தரவு
இதைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்குள் பயணிகளுக்குத் திரும்பச் செலுத்த வேண்டும் என்று இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்குப் பிறகு, இண்டிகோ நிறுவனம் டிக்கெட் கட்டணத்தைத் திருப்பி வழங்கும் பணியைத் தீவிரப்படுத்தியது. அதன் அடிப்படையில், இதுவரை ரூ.610 கோடி கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. விமானச் சேவை இயல்புநிலைக்குத் திரும்பும் செயல்முறையை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், முழுமையான செயல்பாட்டு இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க உறுதியளிப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, மத்திய அரசு புதிய கட்டண உச்சவரம்புகளை நிர்ணயித்துள்ளது. 500 கி.மீ. தூரம் வரையிலான பயணத்துக்கு அதிகபட்சமாக ரூ.7,500-ம், 500 முதல் 1000 கி.மீ. வரை அதிகபட்சம் ரூ.12 ஆயிரமும், 1000 முதல் 1500 கி.மீ. வரை அதிகபட்சம் ரூ.15 ஆயிரமும், 1500 கி.மீ.-க்கு மேல் அதிகபட்சமாக ரூ.18 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கட்டண உச்சவரம்பு வணிக வகுப்பு (Business Class) மற்றும் 'உடான்' திட்டத்தின் (UDAN) கீழ் இயக்கப்படும் விமானங்களுக்குப் பொருந்தாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.