ரிஷி சுனக் மட்டும் கிடையாது மக்களே.! உலகை கலக்கும் 15 இந்தியர்கள் யார் யார் தெரியுமா ?

First Published Oct 26, 2022, 6:52 PM IST

Indians Top Position in the World: இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20ம் தேதி அறிவித்ததை அடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளி ஒருவர் நியாக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகிறது. ரிஷி சுனக் மட்டுமல்ல, இந்தியாவை பூர்விகமாக கொண்ட பலரும் உலகின் பெரிய பொறுப்புகளை அலங்கரித்து வருகின்றனர். அப்படிப்பட்ட 15 பேரை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் உள்ளார். ஜனநாயகக் கட்சியில் இருந்து வந்த கமலா  ஹாரிஸ், அமெரிக்க வரலாற்றில் துணை அதிபரான முதல் பெண்மணி என்பதுடன், இந்தப் பதவியை எட்டிய முதல் இந்திய வம்சாவளி பெண்மணி என்ற பெருமையும் பெற்றார். கமலா ஹாரிஸ் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஹேஸ்டிங்ஸ் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அவர் 2010 மற்றும் 2014 க்கு இடையில் இரண்டு முறை கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார். அவர் 2017 முதல் 2021 வரை அமெரிக்க செனட்டராக இருந்தார். இவரது தாயார் ஷியாமளா கோபாலன் தமிழ்நாட்டில் பிறந்தவர். அதே நேரத்தில், கமலாவின் தந்தை ஜமைக்கா-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த டொனால்ட் ஜே ஹாரிஸ் ஆவார்.

சுந்தர் பிச்சையின் இயற்பெயர் சுந்தரராஜன்.அவர் 1972ல் மதுரையில் பிறந்தார். சென்னையில் வளர்ந்த அவர், 1993 இல் ஐஐடி காரக்பூரில் பிடெக் படித்தார். அதே ஆண்டில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை கிடைத்தது. பிச்சை அங்கிருந்து பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ படித்தார். தற்போது உலகையே கையில் வைத்துக்கொண்டிருக்கும் கூகுள் நிறுவன சிஇஓ என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா மைக்ரோசாப்டின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆவார். அவர் ஸ்டீவ் பால்மருக்கு பதிலாக இவர் அந்த இடத்திற்கு வந்துள்ளார். சத்யா நாதெல்லா மைக்ரோசாப்டின் மூன்றாவது தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இதற்கு முன்பு நிறுவனத்தின் நிறுவனர்களான பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோர் மட்டுமே வகித்தனர். சத்யா நாதெல்லா 1992 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.

சாந்தனு நாராயண் ஒரு இந்திய அமெரிக்க தொழிலதிபர். அவர் அடோப் சிஸ்டம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆவார். 2005 முதல் இதே நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். சாந்தனு நாராயணின் தந்தை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை வைத்திருந்தார். சாந்தனு உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மின்னணுவியல் மற்றும் பொறியியல் பட்டமும், கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும், பவுலிங் கிரீன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை ஆப்பிள் நிறுவனத்துடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிருத்விராஜ் சிங் ரூபன் 2019 முதல் மொரிஷியஸ் அதிபராக உள்ளார். அவர் 24 மே 1959 அன்று மொரிஷியஸில் உள்ள இந்திய ஆர்ய சமாஜ் இந்து குடும்பத்தில் பிறந்தார். மத்திய லங்காஷயர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகச் சட்டம் (எல்எல்எம்) செய்துள்ளார். ரூபான் 1983 இல் அரசியலில் நுழைந்தார். 1995ல் முதல்முறையாக போட்டியிட்டு 2000ல் வெற்றி பெற்றார். 2010 முதல் 2012 வரை மொரீஷியஸ் தேசிய சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரோஹித் கண்ணா, அமெரிக்காவின் கலிபோர்னியா எம்.பியாக உள்ளார். அவர் செப்டம்பர் 13, 1976 அன்று பிலடெல்பியாவில் ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் பஞ்சாபிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். அவரது தந்தை ஒரு இரசாயன பொறியாளர், தாய் ஒரு பள்ளி ஆசிரியர். ரோஹித் கன்னாவின் தாய்வழி தாத்தா அமர்நாத் வித்யாலங்கார் பஞ்சாபில் உள்ள பேடா நகரில் வசிப்பவர். இப்போது அது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் எம்.பி. அவர் ஜூலை 19, 1973 அன்று புதுதில்லியில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். அவர் 3 மாத குழந்தையாக இருந்தபோது, ​​​​அவரது குடும்பம் அமெரிக்காவிற்கு மாறியது. ராஜா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் பட்டம் பெற்றவர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரவிந்த் ஜக்நாத் 2017 முதல் மொரீஷியஸின் பிரதமராக இருந்து வருகிறார். 25 டிசம்பர் 1961 இல் மொரிஷியஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இந்து குடும்பத்தில் பிறந்த ஜெகநாத்தின் அரசியல் வாழ்க்கை 1987 இல் தொடங்கியது மற்றும் 1990 இல் MSM கட்சியில் சேர்ந்தார். முதலில் 2000-ம் ஆண்டு விவசாய அமைச்சராகவும், 2005-ல் நிதி அமைச்சராகவும் பதவியேற்றார். இது தவிர எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். பிரவிந்திற்கு சோனிகா, சோனாலி, சாரா என மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்திய - அமெரிக்க பொறியியலாளர் பராக் அகர்வால் 29 நவம்பர் 2021 அன்று ட்விட்டரின் புதிய CEO ஆனார். 21 மே 1984 அன்று ராஜஸ்தானில் பிறந்தார். பராகின் தந்தை ராம் கோபால் அகர்வால் 2011 இல் BARC இல் இருந்து ஓய்வு பெற்றார். அதே நேரத்தில் தாயார் ஷஷி பேராசிரியராக ஓய்வு பெற்றார். பராக் 2005 இல் ஐஐடி பாம்பேயில் பிடெக் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு முன்பு, பராக் ட்விட்டரில் 11 ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால், அமெரிக்காவின் வாஷிங்டன் எம்.பி.யாக உள்ளார். அவர் செப்டம்பர் 21, 1965 அன்று சென்னையில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தைப் பருவம் இந்தோனேசியாவிலும் சிங்கப்பூரிலும் கழிந்தது. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தவர். பிரமிளா ஸ்டீவ் வில்லியம்சனை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் அயர்லாந்தில் ஒரு பெரிய தலைவர். அவர் தற்போது அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவியை வகித்து வருகிறார். 2017 முதல் 2020 வரை அயர்லாந்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். லியோ டப்ளினில் பிறந்தார், அவரது தந்தை அசோக் மும்பையில் பிறந்தார். லியோவின் தந்தை 1960களில் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரத் ஜக்தேவ் 2020 முதல் கயானாவின் துணைத் தலைவராக உள்ளார். இதற்கு முன்பும் 1997 முதல் 1999 வரை கயானாவின் துணை அதிபராக இருந்தார். அவர் 23 ஜனவரி 1964 அன்று கயானாவில் ஒரு இந்திய இந்து குடும்பத்தில் பிறந்தார். ஜக்தேவ் தனது 13 வயதில் கயானாவின் மக்கள் முன்னேற்றக் கட்சியின் இளைஞர் பிரிவில் சேர்ந்தார் மற்றும் 16 வயதில் அதன் தலைவராக ஆனார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா ஐபிஎம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை மேஜர் ஜெனரல் வினோத் கிருஷ்ணா ராணுவ அதிகாரி. அதே நேரத்தில், அவரது தாயார் ஆர்த்தி கிருஷ்ணா ராணுவ வீரர்களின் விதவைகளுக்கு நலப் பணிகளை செய்து வந்தார். கான்பூரில் உள்ள ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் படித்துள்ளார். 1990 இல் ஐபிஎம் நிறுவனத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்டோனியா கோஸ்டா தற்போது போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக உள்ளார். போர்ச்சுகல் சோசலிஸ்ட் கட்சியில் இருந்து வந்த அன்டோனியோ பாதி போர்த்துகீசியரும், பாதி இந்தியரும் ஆவார். உண்மையில், அன்டோனியாவின் தாய் போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த மரியா அன்டோனியா பாலா ஆவார். அதே நேரத்தில், எழுத்தாளராக இருந்த அவரது தந்தை ஆர்லாண்டோ டி கோஸ்டா, இந்தியாவின் கோவாவில் ஒரு இந்திய குடும்பத்தில் பிறந்தார். அவர் 1987 இல் பெர்னாண்டா ததேயுவை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் பெயர் அமி பெரா. முழுப்பெயர் அம்ரிஷ் பாபுலால் பெரா ஆகும். மார்ச் 2, 1965 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார். அமி பெரா ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி. இவரது தந்தை பாபுலால் பெரா 1958 ஆம் ஆண்டு இந்தியாவில் குஜராத்தின் ராஜ்கோட் நகரிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

click me!