வங்கியில் பணம் எடுக்க... அக்காவின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து வந்த தம்பி! அதிர வைக்கும் சம்பவம்

Published : Apr 28, 2026, 12:19 PM IST

இறந்துபோன தன் அக்காவின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க, அவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிக்க, அவரது எலும்புக்கூட்டையே வங்கிக்கு எடுத்து வந்திருக்கிறார் ஒரு தம்பி.

PREV
14
பணத்துக்காக கல்லறையிலிருந்து வங்கிக்கு வந்த எலும்புக்கூடு

இறந்துபோன ஒருவரின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்றால், அதற்குத் தேவையான ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, இறப்புச் சான்றிதழ் கட்டாயம். ஆனால், இதுபற்றி தெரியாத ஒருவர், இறந்துபோன தன் அக்காவின் கணக்கில் இருந்த 20,000 ரூபாயை எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றிருக்கிறார். அதன் பிறகு நடந்ததை இந்தக் கதையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒடிசாவில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், தன் சகோதரியின் கணக்கில் இருந்த 20,000 ரூபாயைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது உடலைத் தோண்டி, எலும்புக்கூட்டை வங்கிக்கு எடுத்து வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்திலுள்ள படானா பிளாக்கில் உள்ள மாலிபோசி பகுதியில் இருக்கும் ஒடிசா கிராமிய வங்கியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

24
எலும்புக்கூட்டை சுமந்து வந்த தம்பி

இப்படி தன் அக்காவின் எலும்புக்கூட்டை வங்கிக்கு எடுத்து வந்த நபரின் பெயர் ஜீத்து முண்டா (50). இவர் தியனாலி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய அக்கா கர்லா முண்டா (56), உடல்நலக்குறைவால் 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்பு, அவர் கால்நடைகளை விற்று கிடைத்த பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்தார். அவருக்கு வேறு சட்டப்பூர்வ வாரிசுகள் யாரும் இல்லாததால், தம்பி ஜீத்து முண்டா வங்கிக்குச் சென்று, தன் அக்கா கர்லா முண்டாவின் கணக்கில் உள்ள பணத்தைக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், வங்கி அதிகாரிகள், அவருடைய அக்காவின் இறப்புச் சான்றிதழ் மற்றும் பிற தேவையான ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.

ஆனால், படிப்பறிவில்லாத ஜீத்து முண்டாவால் பணத்தை எடுப்பதற்குத் தேவையான ஆவணங்களைத் திரட்ட முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், புதைக்கப்பட்ட தன் சகோதரியின் உடலை மீண்டும் தோண்டி, எலும்புக்கூட்டை எடுத்து, அதைத் தோளில் சுமந்துகொண்டு வங்கிக்கு வந்துள்ளார்.

34
எலும்புக்கூடை எடுத்து வந்தது ஏன்?

இதுகுறித்து ஊடகங்கள் அவரிடம் கேட்டபோது, "என் அக்காவின் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக பலமுறை வங்கிக்குச் சென்றேன். ஆனால், அங்கிருந்தவர்கள், கணக்கு வைத்திருப்பவரையே நேரில் அழைத்து வாருங்கள் என்று சொன்னார்கள். அவர் இறந்துவிட்டார் என்று நான் சொல்லியும் அவர்கள் என் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. அதனால், விரக்தியில் அவரது கல்லறையைத் தோண்டி, அவர் இறந்துவிட்டார் என்பதைக் காட்ட, அவருடைய எலும்புக்கூட்டை எடுத்து வந்தேன். அவர் இறந்துவிட்டார் என்பதற்கு இதுதான் சாட்சி," என்று கூறியுள்ளார்.

44
அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள்

ஜீத்து எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், படானா காவல் நிலைய ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜீத்து ஒரு படிப்பறிவில்லாத பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு போன்ற விஷயங்கள் பற்றித் தெரியவில்லை. இறந்தவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் நடைமுறையை வங்கி அதிகாரிகளும் அவருக்குச் சரியாக விளக்கத் தவறிவிட்டனர்," என்றார்.

பின்னர், போலீசார் ஜீத்துவிடம், அவருடைய இறந்த சகோதரியின் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துத் தருவதாக உறுதியளித்தனர். அதன்பிறகு, கர்லா முண்டாவின் எலும்புக்கூடு, போலீசாரின் முன்னிலையில் மீண்டும் கல்லறையில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து உள்ளூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மான்சா தண்டபத் பேசுகையில், "ஜீத்து முண்டா, தனது இறந்த சகோதரியின் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெற யாரிடமும் கேட்கவில்லை. இன்றுதான் எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்," என்று கூறினார். இதற்கிடையில், கர்லா முண்டாவின் வங்கிக் கணக்கின் நாமினியும் இறந்துவிட்டதால், தற்போது ஜீத்து முண்டா மட்டுமே அந்தப் பணத்திற்கு ஒரே வாரிசு என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories