பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் திடீரென விலகியுள்ளார். அவர் எதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்? பாஜக அழுத்தம் காரணமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் பீகார் முதல்வராக இருந்து வந்தார். இந்த நிலையில், பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ்குமார் இன்று (மார்ச் 5) அதிரடியாக அறிவித்துள்ளார். மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
24
நிதிஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பு
இது தொடர்பாக நிதிஷ்குமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீங்கள் என் மீது தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் ஆதரவினால் மட்டுமே, என்னால் பீகார் மாநிலத்திற்கும் உங்கள் அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய முடிந்தது. உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் தந்த வலிமையால்தான்.
34
மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன்
இன்று பீகார் வளர்ச்சியிலும் கௌரவத்திலும் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இதற்காக முன்னரே பலமுறை உங்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துள்ளேன். எனது நாடாளுமன்ற வாழ்க்கை தொடங்கிய காலத்திலிருந்தே, பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் (சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை) மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) உறுப்பினராக வேண்டும் என்ற விருப்பம் என் மனதில் இருந்தது. அந்த வகையில், தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் நான் மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன்.
உங்களுடன் எனக்குள்ள இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும், உங்களுடன் இணைந்து 'வளர்ச்சியடைந்த பீகாரை' உருவாக்கும் எனது உறுதிப்பாடு எப்போதும் மாறாமல் இருக்கும் என்றும் நான் முழு மனதுடன் உறுதியளிக்கிறேன். அமையவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கு எனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் எப்போதும் இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
பாஜகவும் அழுத்தம் கொடுத்ததா?
மாநிலங்களவை உறுப்பினராக நிதிஷ்குமார் பதவி விலகி இருந்தாலும் பாஜக அழுத்தம் காரணமாக அவர் விலகி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். நிதிஷ்குமார் பதவி விலகுவதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிதிஷ்குமார் வீட்டின் முன்பும், கட்சியின் அலுவலகம் முன்பும் கூடி போராட்டத்தில் ஈடுபடும் அவர்கள், நிதிஷ்குமார் முதல்வர் பதவியை தொடர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.