Delhi Fire Accident : தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இன்று (03-06-2026) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மாளவியா நகர் பகுதியில் உள்ள ‘லெமன் கிரீன்’ என்ற உணவகத்தில் இன்று காலை வழக்கம் போல் பணிகள் நடந்துகொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் உணவக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் உள்ளே இருந்தனர்.
தீ மிக வேகமாக பரவியதால், கட்டிடத்திற்குள் இருந்தவர்களால் வெளியேற முடியாமல் புகை மூட்டத்திற்குள் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக உணவகத்தின் அடித்தளத்தில் இருந்த பலரால் தப்பிக்க முடியாமல் போனது.
23
விரைந்த மீட்புக்குழுவினர்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து உணவகத்தின் அடித்தளத்திற்குள் புகுந்து சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர். முதற்கட்டமாக 11 பேர் மீட்கப்பட்டு, CATS ஆம்புலன்ஸ்கள் மூலம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், கடுமையான தீக்காயங்கள் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
33
முதலமைச்சர் இரங்கல்
இந்த கொடூர விபத்து குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டதாவது:
"மாளவியா நகர் உணவக தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை, பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) மற்றும் CATS ஆம்புலன்ஸ் சேவைகள் உடனடியாக விரைந்து செயல்பட்டு பலரை மீட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் டெல்லி அரசு முன்னின்று வழங்கி வருகிறது. இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டெல்லி அரசு உறுதுணையாக இருக்கும்."
விசாரணை தீவிரம்
தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்து குறித்து டெல்லி காவல்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளன.
உணவகத்தில் போதிய தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள் (Fire Safety Norms) கடைப்பிடிக்கப்பட்டதா, ஏதேனும் விதிமீறல்கள் அல்லது அலட்சியம் காரணமாக இந்த விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.