
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கி உள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் இருந்த தடம் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்தன.
இந்த நிலச்சரிவில் 222 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 4000-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவால் முண்டகையில் இருந்த 500 வீடுகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும், வெறும் 40 வீடுகள் மட்டுமே தற்போது எஞ்சியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளதாகவும், 200 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை எனவும் மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வயச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகட்ட இலவச நிலம் வழங்குவதாக பாபி செம்மனூர் என்பவர் அறிவித்துள்ளார். கேரளாவில் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு வயநாட்டில் 1000 ஏக்கர் அளவில் தேயிலை தோட்டம் உள்ளது. மேலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் ஒன்றையும் அவர் நடித்து வருகிறார். இவரின் குடும்பம் தங்க வியாபாரம் செய்து வருகிறது.
தொழிலதிபர் என்பதை தாண்டி பல்வேறு மக்கள் நல சேவைகள் கேரள மக்கள் மத்தியில் பிரபலமானவர் இந்த பாபி செம்மனூர். இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகட்டிக்கொள்ள நிலத்தை இலவசமாக வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ இங்கு எனக்கு 1000 ஏக்கர் இடம் உள்ளது. அந்த இடத்தில் ஒரு பகுதியாக 100 குடும்பங்களுக்கு வீடுகட்ட இலவசமாக நிலம் வழங்க உள்ளேன்.
பலரும் அவர்களுக்கு உணவு, உடைகளை வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு வீடு இல்லை. அவர்கள் எங்கே தங்குவார்கள்? எங்கே போவார்கள்? அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய வீடுகள் அழிந்து விட்டன. அதனால் எனது அறக்கட்டளை மூலம் வீடுகளை இழந்த மக்களுக்கு நிலம் வழங்குவதுடன், கட்டுமான செலவுக்கும் உதவ உள்ளோம்.
இதுகுறித்து அமைச்சரிடம் ஆலோசனை செய்தேன். அவர் பாதிக்கப்பட்ட மக்களின் பட்டியலை தர உள்ளதாக கூறினார். இந்த வீடுகளை கட்ட 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளோம். ஒருவேளை இதை விட அதிக நிலம் தேவைப்பட்டாலும் அதை வழங்க உள்ளோம்.” என்று தெரிவித்தார்.