பாகிஸ்தான் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மிஸ்பூர், முசாஃபராபாத், கில்கிட்-பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது சர்வதேச நாடுகளையும் எட்டியுள்ளது. பிரிட்டனில் உள்ள காஷ்மீரி புலம்பெயர்ந்தோர் பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியுள்ளனர். சுமார் 30 பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், அமைதியான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கவும் பிரிட்டன் அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா கண்டனம்
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA), பாகிஸ்தான் தனது சொந்த தோல்விகளை மறைக்க பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும், தவறான செய்திகளைப் பரப்பி திசைதிருப்ப முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்குப் பாகிஸ்தான் அரசு சர்வதேச சமூகத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தரப்போ, போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதால் தான் தாங்கள் நடவடிக்கை எடுத்ததாகத் தற்காப்புப் பேசி வருகிறது. இருப்பினும், களத்தில் நிலவும் சூழல் மிகவும் பதற்றமாகவே நீடிக்கிறது.