
நாட்டின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் (UPSC) தேர்வு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., போன்ற உயரிய பதவிக் கனவுகளைத் தாங்கி நிற்கிறது. இந்த நிலையில், தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், முதல்நிலைத் தேர்வு (Preliminary) முடிந்த உடனேயே தற்காலிக விடைகுறிப்பை (provisional answer key) வெளியிட UPSC ஆணையம் முடிவு செய்துள்ளது. இது, முன்பு ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருந்த நடைமுறையை விரைவுபடுத்துகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, UPSC தலைவர் டாக்டர் அஜய் குமார் அவர்கள் தேர்வர்களுடன் நடத்திய நேரடி கலந்துரையாடலில், வயது வரம்பு மற்றும் முயற்சி எண்ணிக்கை தொடர்பான முக்கிய சந்தேகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
தற்போதுள்ள விதிகளில் வயது வரம்பை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என UPSC தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தற்போதுள்ள விதிகளின்படி, தேர்வெழுத குறைந்தபட்ச வயது 21 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு பிரிவுகளின்படி பின்வருமாறு:
• பொதுப் பிரிவு (General Category): 32 ஆண்டுகள்.
• ஓபிசி (OBC): 35 ஆண்டுகள்.
• எஸ்.சி, எஸ்.டி (SC, ST): 37 ஆண்டுகள்.
ஆகஸ்ட் 1-ஐ கட்-ஆஃப் தேதியாக நிர்ணயம் செய்வதால், மே-ஜூன் மாதங்களில் பட்டம் முடிக்கும் பட்டதாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இதை ஜனவரி 1 என மாற்றினால், பல மாணவர்கள் ஒரு வருட தகுதியை இழக்க நேரிடும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
UPSC தேர்வில் பங்கேற்பதற்கான முயற்சி எண்ணிக்கையிலும் (Number of Attempts) தற்போது எந்த மாற்றமும் இல்லை என்றும் தலைவர் உறுதிப்படுத்தினார்.
• பொதுப் பிரிவு (General Category): 6 முயற்சிகள்.
• ஓபிசி (OBC): 9 முயற்சிகள்.
• எஸ்.சி, எஸ்.டி (SC, ST): வயது வரம்பு முடியும் வரை வரம்பற்ற முயற்சிகள் (Unlimited attempts).
2014-க்கு முன்னர் 4 முயற்சிகளே அனுமதிக்கப்பட்ட நிலையில், அது 6 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது மேலும் மாற்றம் ஏதும் முன்மொழியப்படவில்லை.
UPSC தேர்வில் வெற்றிபெற பயிற்சி மையம் (Coaching) கட்டாயம் இல்லை என்று தலைவர் கருத்து தெரிவித்தார். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையைச் சேர்ந்த (Tier-2 மற்றும் Tier-3) சிறிய நகரங்களில் இருந்து பல மாணவர்கள் பயிற்சி மையங்கள் இல்லாமல் தேர்ச்சி பெறுவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், பொறியியல் பின்னணியில் உள்ள பல மாணவர்கள் இப்போது மனிதநேயப் பாடங்களைத் (humanities subjects) தேர்ந்தெடுத்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிக் காண்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போலி ஆவணங்களைத் தடுக்க, தேர்வர்களின் சான்றிதழ்களை 'டிஜிலாக்கர்' (DigiLocker) மூலமாகச் சரிபார்க்கும் பணியில் UPSC ஆணையம் ஈடுபட்டுள்ளது. போலி அல்லது மோசடியான சான்றிதழ்களைப் பயன்படுத்தும் தேர்வர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், மூன்று ஆண்டுகளுக்கு UPSC தேர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.