தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! நிலுவையில் உள்ள மொத்த சம்பளத்தையும் வழங்க உத்தரவு

First Published Aug 7, 2024, 5:08 PM IST

கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை மொத்தமாக விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கௌரவ விரிவுரையாளர்கள்

தமிழகத்தில் மொத்தமாக உள்ள 164 கலை அறிவியல் கல்லூரிகளில் 7,314 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். உதவி பேராசியர்களுக்கான அனைத்து தகுதிகளும் இருந்த போதிலும் மாதம் ரூ.20 ஆயிரம் என்ற மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

குறைவான ஊதியம்

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி செய்யும் நிலையில் நாட்டிலேயே தமிழகத்தில் தான் குறைந்த மதிப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய நிலுவைத் தொகை என்பது தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. 

Latest Videos


ராமதாஸ் கோரிக்கை

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு கௌரவ விரிவுரையாளர்களின் உழைப்பை சுரண்டக் கூடாது. அவர்களுக்கான ஊதியத்தை ஆண்டுக்கு 1 மாதம் நிலுவையில் வைப்பது ஏற்புடையது கிடையாது. நீதிமன்ற பரிந்துரைகளின் படி கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை கோரிக்கை

அதே போன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களால் தான் முழுமையாக செயல்படுகிறது. பல கல்லூரிகளில் முதல்வர்களே இல்லாத சூழலில் அந்த பணியையும் கௌரவ விரிவுரையாளர்களே மேற்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் ஊதியத்தை நிலுவை வைப்பது ஏற்புடையதல்ல. அவர்களுக்கான ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

நிலுவை ஊதியம்

இந்நிலையில் தமிழக அரசு இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது, அந்த அறிவிப்பில், “அரசு பல்கலைக்கழகங்களில் உறுப்பு கல்லூரிகளாக இருந்த கல்லூரிகள் நிர்வாகம் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்படி மாற்றம் செய்யப்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிலுவை இருந்து வந்தது. இந்த நிலுவையை உடனடியாக வழங்க உயர்கல்வி துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஊதியம் விடுவிப்பு

அதன்படி நிலுவையில் இருந்த சம்பள பாக்கி மொத்தமாக விடுவிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் கௌரவ விரிவுரையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!