
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனிக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை. இந்திய தொழில் வல்லுநர்களை, குறிப்பாக பொறியாளர்களை ஈர்க்க, ஜெர்மனி தனது ப்ளூ கார்டு கொள்கையில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
புதிய ப்ளூ கார்டு கொள்கையானது திறமையான தொழிலாளர்கள் ஜெர்மனியில் வாழவும் வேலை செய்யவும் கதவுகளைத் திறக்கப் போகிறது. 2025ஆம் ஆண்டு முதல் புதிய கொள்கை அமலுக்கு வரும். இதன் மூலம் இந்தியர்கள் மிகப்பெரிய பலனைப் பெறப் போகிறார்கள்
ப்ளூ கார்டு என்பது வெளிநாட்டு தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும் அனுமதி அளிக்கிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் 25 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்க கிரீன் கார்டு போன்றது. ஆனால், அமெரிக்க கிரீன் கார்டு அமெரிக்காவில் மட்டுமே செல்லுபடியாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் ப்ளூ கார்டு ஒரு துறையில் நிபுணராக இருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்துகொள்ள வேண்டும். இந்த ப்ளூ கார்டு பெற்ற பிறகுதான், ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமையையும் பெறமுடியும்.
புதிய ப்ளூ கார்டு கொள்கை இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்? புதிய கொள்கையில், ப்ளூ கார்டு பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பள வரம்பு மாறியுள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு 45,300 யூரோக்கள் சம்பளம் பெறும் தொழில் வல்லுநர்களும் ப்ளூ கார்டு பெற முடியும்.
இது ஜெர்மனியின் சராசரி சம்பளத்தை விட 1.5 மடங்கு அதிகம். ஐடி, ஹெல்த்கேர் மற்றும் இன்ஜினியரிங் போன்ற தொழில்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 41,041.80 யூரோக்கள் மட்டுமே. இந்த மாற்றம் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் ப்ளூ கார்டைப் பெறுவதை எளிதாக்கும்.
ஜெர்மனி பல்வேறு துறைகளில், குறிப்பாக சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் திறமையான பணியாளர்களைத் தேடுகிறது. ப்ளூ கார்டு பெறுவதற்குத் தேவையான தொழில்களின் பட்டியலில் புதிதாகப் பல தொழில்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பாவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்திருந்தால், 41,041.80 யூரோ குறைந்தபட்ச சம்பளத்தில் எந்தத் துறையிலும் ப்ளூ கார்டு பெறலாம். பட்டதாரி இந்திய இளைஞர்களுக்கு வெளிநாட்டில் பணிபுரிய இது ஒரு சிறந்த வாய்ப்பு.
உங்களிடம் திறமை இருந்தால், பட்டப்படிப்பு முடிக்காதது கூட ஒரு பிரச்சனை இல்லை! அனுபவத்துக்கு ஜெர்மனி முக்கியத்துவம் தருகிறது. பட்டம் பெறாதபோதும், குறைந்தபட்சம் மூன்று வருட பணி அனுபவம் உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ப்ளூ கார்டு பெறலாம்.
ஜெர்மனி விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கி இருக்கிறது. அதாவது குறைவான ஆவணங்களைப் பெற்று, விரைவான செயலாக்கத்துக்கு வழிவகை செய்துள்ளது. இது ஜெர்மனியில் தங்கள் பயணத்தைத் தொடங்க விரும்புவோருக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. மேலும் தொழில் வல்லுநர்கள் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.
பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஜெர்மனியும் திறமையான தொழில் வல்லுநர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. மக்கள்தொகையில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மத்தியில் வேலை சந்தையில் உள்ள இடைவெளியை நிரப்ப திறமையான நிபுணர்கள் ஜெர்மனிக்குத் தேவைப்படுகிறார்கள்.