Assistant Professor Posts அரசு கலைக் கல்லூரிகளில் 10,000 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் இருக்கும்போது, வெறும் 2,708 இடங்களை மட்டுமே நிரப்புவது உயர்கல்விக்கு திமுக இழைக்கும் துரோகம் என பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்திருக்கிறார். ஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை உயர்கல்விக்கு திமுக அரசு இழைத்துள்ள பெரும் துரோகம் என்றும் அவர் சாடியுள்ளார்.
24
நான்கரை ஆண்டுகளில் நிரப்பப்படாத பணியிடங்கள்: சீரழிந்த கல்வித்தரம்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். அதனால் அரசு கலைக்கல்லூரிகளின் கல்வித்தரம் சீரழிந்திருக்கிறது. அரசு கலைக்கல்லூரிகளின் இந்த அவலநிலைக்குச் சான்றாக, மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், அவற்றில் சேர மாணவர்கள் தயாராக இல்லை என்பதும், அதனால் 25 சதவீத இடங்கள் இன்னும் காலியாகக் கிடக்கின்றன என்பதும் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
34
தமிழக அரசு இழைக்கும் மாபெரும் துரோகம்
உயர்கல்வித்துறையை திமுக அரசு தொடர்ந்து சீரழித்து வருவதை மீண்டும், மீண்டும் பாமக அம்பலப்படுத்தியதன் விளைவாகத் தான் இப்போது குறைந்தபட்சம் 2708 இடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வந்துள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார். தமிழக அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000 பணியிடங்கள் காலியாக இருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டது. அதன் பின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் ஆகியவற்றையும் சேர்த்தால், காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கக்கூடும். இந்த நேரத்தில், அதை விடக் குறைவாக 2708 பேர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என திமுக அரசு அறிவித்திருப்பதன் மூலம் உயர்கல்விக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாமக-வின் கோரிக்கை: அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்
உயர்கல்வித்துறையின் நலனில் தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அதில் பல்கலைக்கழக மானியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி கொண்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.