"சான்றிதழ் வேண்டுமா? 3 மாத சம்பளத்தை வெட்டு.." பேராசிரியர்களை பிணைக் கைதிகளாக்கும் கல்லூரிகள் - பகீர் ரிப்போர்ட்!

Published : Dec 10, 2025, 10:12 PM IST

Certificates Hostage தமிழகத்தில் பல கல்லூரிகள் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களைத் தர மறுத்து அவர்களைச் சிக்கலில் ஆழ்த்தி வருகின்றன. இது குறித்து ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதையை இங்கே படியுங்கள்.

PREV
16
Certificates Hostage "சர்டிபிகேட் வேணும்னா காசு கொடு.." பேராசிரியர்களைக் கதறவிடும் கல்லூரிகள்!

பொறியியல் கல்லூரிகள் என்பவை மாணவர்களுக்கு அறிவைப் புகட்டும் இடங்களாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள சில தனியார் பொறியியல் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களுக்குச் 'சிறைச்சாலைகளாக' மாறி வருகின்றனவோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அசல் சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு, வேலையை விட்டுச் செல்ல நினைக்கும் போது அதைத் தர மறுத்து 'பிளாக்மெயில்' செய்யும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

26
இரண்டு ஆண்டு சட்டப் போராட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்தவர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்.டெக் பட்டதாரியான இவர், அக்கல்லூரியிலிருந்து விலகியபோது தனது அசல் சான்றிதழ்களைத் திரும்பப் பெறப் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.

கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களைத் தர மறுக்கவே, வேறு வழியின்றி அவர் நீதிமன்றத்தை நாடினார். சுமார் இரண்டு ஆண்டுகால நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகே அவரால் தனது சான்றிதழ்களை மீட்க முடிந்தது. இது ஒரு தேவியின் கதை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் இந்தச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர்.

36
ஆர்டிஐ அம்பலப்படுத்திய பகீர் கணக்கு

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) மனுவின் மூலம் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், சான்றிதழ்களைத் தர மறுப்பதாகக் கூறி 81 பேராசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொதுத் தகவல் அலுவலர் கோகிலவாணி அளித்த பதிலின்படி:

• 2021-22 ஆம் ஆண்டில் மட்டும் 34 புகார்கள் வந்துள்ளன.

• அதற்கு அடுத்த ஆண்டும் அதே அளவு (34) புகார்கள்.

• கடந்த ஆண்டில் 13 புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்தக் கல்லூரிகள் ஏதோ ஒரு மாவட்டத்தில் மட்டும் இல்லை, மாநிலம் முழுவதும் பரவியுள்ளன என்பதுதான் வேதனையான உண்மை.

46
விதிமுறைகளை மீறும் கல்லூரிகள்

"நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் தங்கள் சான்றிதழ்களை மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) விதிகளுக்குப் புறம்பாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன," என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ராதாகிருஷ்ணன்.

AICTE விதிமுறை 6.14 சொல்வது என்ன?

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பேராசிரியர்கள் பணியில் சேரும்போது அவர்களின் அசல் சான்றிதழ்களைச் சரிபார்ப்பதற்காக (Verification) மட்டுமே வாங்க வேண்டும். அதை நிரந்தரமாகத் தன்னிடம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. அண்ணா பல்கலைக்கழகமும் இதையே வலியுறுத்தியுள்ளது. ஆனால், பல கல்லூரிகள் இதைத் துளியும் மதிப்பதில்லை.

56
மூன்று மாத சம்பளம் கட்டாயம்?

பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு பாதிக்கப்பட்ட ஆசிரியர் தனது சோகத்தைப் பகிர்ந்து கொண்டார். "நான் எம்.டெக் முடித்துவிட்டு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தேன். பத்தாம் வகுப்பு முதல் முதுநிலை வரை அனைத்து அசல் சான்றிதழ்களையும் அவர்கள் வாங்கிக்கொண்டனர். குறைந்த சம்பளம் என்பதால் நான் வேலையை விட்டுறச் செல்ல முயன்றேன்.

அப்போது, 'சான்றிதழ் வேண்டும் என்றால் மூன்று மாத சம்பளத்தை அபராதமாகக் கட்ட வேண்டும்' என்று நிர்பந்தித்தனர். நான் மறுத்ததால், கல்லூரி நிர்வாகம் என் மீது வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் மூலம் சான்றிதழ்கள் முடக்கப்பட்டன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சமரசம் ஏற்பட்டு சான்றிதழ் கைக்கு வந்தாலும், அது மிகவும் தாமதமாகிவிட்டது. 28 வயதான என்னால் வேறு எங்கும் சரியான நேரத்தில் பணியில் சேர முடியவில்லை," என்று கண்ணீருடன் கூறினார்.

66
தீர்வு என்ன?

செமஸ்டர் நடுவில் ஆசிரியர்கள் வேலையை விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்துகிறது. அதேசமயம், அசல் சான்றிதழ்களைப் பிணைக் கைதிகள் போல வைத்துக்கொண்டு, ஆசிரியர்களின் வாழ்க்கையோடு விளையாடும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories