நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைகளை தான் நாடுகிறோம். சிறிய வியாதிகளுக்கு அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம். ஆனால் அறுவை சிகிச்சை போன்ற பெரிய சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு தான் செல்ல வேண்டியதுள்ளது. சில மருத்துவமனைகள் இதுதான் வாய்ப்பு என்று நோயாளிகளிடம் இயல்பான தொகையை விட பலமடங்கு பணம் வசூலித்து வருகின்றன. இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலானது. அதில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு சுமார் ₹1,00,000 பில் போடப்பட்டது. ஆனால், அந்த நோயாளி ஒவ்வொரு செலவுக்கும் தனித்தனியாகவும், விரிவாகவும் பில் ரசீது கேட்டவுடன், மருத்துவமனை நிர்வாகம் பில்லைத் திருத்தி ₹57,000 ஆகக் குறைத்தது. அப்போது தான் அவர் செய்துகொள்ளாத ஒரு அறுவை சிகிச்சைக்கு அவரிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதை அறிந்துகொண்டார்.
செய்யாத சிகிச்சைக்கு ரூ.31,000 கட்டணம்
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அந்த நபர், மருத்துவமனையால் அனுப்பப்பட்ட ஆறு பக்க ஆவணத்தை கவனமாகப் படித்துப் பார்த்தபோது, தனக்குக் கிடைக்காத மயக்க மருந்து ஆலோசனைக்காக (ரூ. 31,430) கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்ததாகவும், மேலும், ஒரு சப்ளை கிட்-க்கான கட்டணம் இரண்டு முறை குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.57,000 ஆக குறைந்த பில்
அதாவது அவர் சிகிச்சைக்குப் பிறகு வழங்கப்பட்ட மொத்தத் தொகையை அப்படியே ஏற்காமல், எந்தெந்த சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் என்று விவரமாக கேட்டுள்ளார். இதனால் ஆடிப்போன மருத்துவமனை ஊழியர்கள் பில்லில் தவறு நடந்துள்ளதாகக் கூறி, தொகையைக் கணிசமாகக் குறைத்தனர். அப்போது தான் பில் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.57,000 ஆக குறைந்துள்ளது. மொத்த பில் போடும்போது தேவையற்ற மருத்துவக் கட்டணங்கள், அவர் செய்யாத சிகிச்சைகளுக்கு கட்டணம் சேர்த்துள்ளனர்.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
ஆகவே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது மொத்தத் தொகையை மட்டும் பார்க்காமல், ஒவ்வொரு மருந்து மற்றும் சிகிச்சைக்கும் தனித்தனி ரசீது கேளுங்கள். மருத்துவமனை மருந்தகத்தில் விற்கப்படும் மருந்துகளின் விலை, வெளிக்கடைகளை விட அதிகமாக இருக்கிறதா என்று சரிபாருங்கள். உங்களிடம் இன்சூரன்ஸ் இருந்தால், அதற்காகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தனியார் மருத்துவமனைகளில் இது போன்ற மோசடிகள் நடந்தால் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம்