இந்த எத்தனால் கலப்புத் திட்டத்தின் மூலம் இதுவரை 1.97 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. 316 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக இது அமைந்துள்ளது. மேலும், 950 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான CO₂ உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வரி செலுத்துவோர் பணத்தில் நடக்கும் மானியம் என்ற குற்றச்சாட்டையும் அமைச்சகம் நிராகரித்துள்ளது.
"எத்தனால் கலப்பு என்பது வரி செலுத்துவோர் மானியம் அல்ல. இது இந்தியாவின் எரிசக்தி காப்பீடு. நெருக்கடி வந்தபோது அது தன்னை நிரூபித்துள்ளது," என்று அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த முயற்சி மூலம் விவசாயிகளுக்கும், எத்தனால் உற்பத்தி ஆலைகளுக்கும் நேரடியாக 1.66 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் கிடைத்துள்ளது. இதன் மூலம் விவசாய விளைபொருட்களுக்கு ஒரு நம்பகமான உள்நாட்டு சந்தை உருவாகியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய்க்காக 88% வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலைமையையும் இது குறைக்கிறது.