Google Pay, PhonePe Users Alert: இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் முக்கிய மாற்றத்தை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
யுபிஐ மூலம் பணம் செலுத்துவது இன்று இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலான இடங்களில் கூகுள்பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
25
செப்டம்பர் 4-க்குள் அதிரடி மாற்றம்
இந்த புதிய விதிகளின்படி, செப்டம்பர் 4-க்குள் அனைத்து யுபிஐ செயலிகளும் மற்றும் வங்கிகளும் தேவையான தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு, யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போதோ அல்லது பெறும்போதோ, பயனரின் முழு மொபைல் எண் திரையில் காட்டப்படாது. அதற்கு பதிலாக, கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே காண்பிக்கப்படும். இதன் மூலம் தேவையற்ற தனிப்பட்ட தகவல் பகிர்வை குறைக்க முடியும்.
மேலும், QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளிலும், பணம் அனுப்பியவர் அல்லது பெற்றவரின் முழு மொபைல் எண் காட்டப்படாது. இதனால் கடைகள் அல்லது அறிமுகமில்லாத நபர்களுடன் பரிவர்த்தனை செய்யும்போது தனியுரிமை மேலும் பாதுகாக்கப்படும்.
NPCI-யின் மற்றொரு முக்கிய மாற்றம், யுபிஐ பயனர்பெயர் பயன்பாடு ஊக்குவிப்பதாகும். மொபைல் எண்ணைக் கொண்ட யுபிஐ ஐடி-க்கு மாற்றாக, username@bank போன்ற பயனர் விருப்பமான யுபிஐ ஐடி-களை உருவாக்கும் வசதியை செயலிகள் இயல்புநிலையாக (Default) வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை பகிராமல் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
55
மொபைல் நம்பர் மறைப்பு
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், Digital Personal Data Protection (DPDP) Act-க்கு இணங்க தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். மொபைல் எண்கள் வெளிப்படையாகத் தெரியும் சூழ்நிலையில் தேவையற்ற அழைப்புகள், மோசடி முயற்சிகள் மற்றும் தனியுரிமை பிரச்சினைகள் ஏற்பட்டதாக பல புகார்கள் எழுந்தன. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, யுபிஐ பரிவர்த்தனைகள் முன்பைவிட பாதுகாப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.