
E20 எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. பல கோடி வாகனங்களில் பல ஆண்டுகளாக சோதனை செய்து, அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த பிறகே இந்த எரிபொருள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், இதனால் இன்ஜின்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லை என்றும் அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு விளக்கம்
சமூக வலைதளங்களில் இதுகுறித்து எழுந்த கவலைகளுக்கு பதிலளித்த அமைச்சகம், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், கள நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து, சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளது. மத்திய அரசு மேலும் கூறுகையில், E15-க்கும் அதிகமான எத்தனால் கலந்த பெட்ரோல் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகவும், E19-E20 எரிபொருள் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகவும் புழக்கத்தில் உள்ளது.
இதுவரை 20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கோடிக்கும் அதிகமான பெட்ரோல் கார்கள் இந்த எரிபொருளை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றன. அவற்றில் அமைப்பு ரீதியான பெரிய பழுதுகள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ஒரு விரிவான விளக்கத்தில், அமைச்சகம் தனது முடிவு "25 ஆண்டுகளுக்கும் மேலான படிப்படியான அமலாக்கம், விரிவான அறிவியல் சோதனைகள், கோடிக்கணக்கான வாகனங்களில் இருந்து பெறப்பட்ட தொடர்ச்சியான கள அனுபவம், வாகன உற்பத்தியாளர்களின் சேவை பதிவுகள், சம்பந்தப்பட்ட தரப்பினருடனான ஆலோசனைகள் மற்றும் தற்போதைய தரக் கண்காணிப்பு" ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று கூறியது.
பழைய வாகனங்கள் குறித்த கவலைகளுக்கு பதிலளித்த அமைச்சகம், ஒரு முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரின் சேவைத் தரவை மேற்கோள் காட்டியது. அந்த நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 2.84 கோடி வாகனங்களுக்கு சர்வீஸ் செய்துள்ளது. இதில் சுமார் 1.5 கோடி வாகனங்கள் E20-க்கு ஏற்றதாக சான்றளிக்கப்படாத பழைய மாடல்கள். ஆனாலும், "E20 எரிபொருளால் இன்ஜினில் அரிப்பு, வழக்கத்திற்கு மாறான தேய்மானம் அல்லது பாகங்களின் ஆயுட்காலம் குறைவது போன்ற எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று அந்த தரவுகள் காட்டுவதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியது.
மைலேஜ் குறித்த கவலைகளுக்கும் அமைச்சகம் பதிலளித்துள்ளது. E10 எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்ட சில பழைய வாகனங்களில் மைலேஜ் குறைந்தாலும், அது பொதுவாக 3-5 சதவீதம் மட்டுமே இருக்கும். ஆனால், ஓட்டுநரின் பழக்கவழக்கங்கள், டயர் அழுத்தம், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனப் பராமரிப்பு போன்ற காரணிகள்தான் மைலேஜில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், E20 பெட்ரோல் அதிக ஆக்டேன் மதிப்பீட்டையும், சுத்தமான எரிப்பையும், மென்மையான இன்ஜின் செயல்திறனையும் அளிக்கிறது என்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கமாக கூறியுள்ளது.
ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM), இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI), உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள், சோதனை ஏஜென்சிகள் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பிறகே அதிக எத்தனால் கலந்த எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.