மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் குஜராத்தின் கோராஜ் பகுதியில் புதிய வாகன உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. குஜராத் தொழில் வளர்ச்சிக் கழகம் (GIDC) வழங்கிய 1,750 ஏக்கர் நிலத்தில் இந்த ஆலை உருவாகும். இந்த நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, காந்திநகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்திர படேல் முன்னிலையில் முதலீட்டுக் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. இதில் மாருதி சுசுகியின் நிர்வாக இயக்குநர் ஹிசாஷி டேக்யூச்சி, துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் சுனில் கக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக 12,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் துணை யூனிட்கள், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் (MSME) உருவாகும் வாய்ப்பு அதிகம். இதன் மூலம் 7.50 லட்சத்திற்கும் அதிகமான மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.