
ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவராக இருக்கிறார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக சுமார் 2.5 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த நிலையில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6, 2026 காலை 8:26 மணியளவில் அவர் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். மீனம் என்பது குரு பகவானின் சொந்த ராசியாகும். சனி பகவானின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி ஆகிய நிலைகளை ஏற்படுத்துகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் கட்டமான விரய சனி தொடங்குகிறது. இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு வீடு கட்டுதல் திருமணம் போன்ற சுப விரயங்கள் ஏற்படலாம் அல்லது தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதலீடுகளில் அதிக எச்சரிக்கை தேவை. அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பண விவகாரங்களில் யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுதல் கூடாது. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.
சிம்ம ராசிக்கு சனி பகவான் எட்டாம் இடத்திற்கு வருவதால் அஷ்டம சனி தொடங்குகிறது. இது சற்று சவாலான காலமாக இருக்கும். வேலையில் நெருக்கடிகள், மறைமுக எதிர்ப்புகள் மற்றும் காரியங்களில் தடைகள் ஏற்படலாம். வாகனங்களை ஓட்டும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறிய பிரச்சனைகள் கூட பெரிய வம்பு வழக்குகளை அழைத்து வரலாம். வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தம் ஏற்படலாம். புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதிகளில் ஈடுபடலாம். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும். சட்ட சிக்கல்களில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
தனுசு ராசிக்கு சனி பகவான் நான்காம் வீட்டில் அமர்வதால் அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. இதன் காரணமாக தாய் வழி உறவுகளில் சிக்கல்கள் எழக்கூடும். வீடு அல்லது வாகன பராமரிப்புக்காக செலவுகள் அதிகமாகலாம். பூர்வீக சொத்து விவகாரங்களில் பின்னடைவு ஏற்படக்கூடும். உடல்நலத்தில் அதிக கவனம் தேவைப்படும். முதலீடுகள் அல்லது சொத்துக்களை வாங்கும் பொழுது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதிக அலைச்சல்கள் காரணமாக மன அழுத்தம், மனசோர்வு ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
கும்ப ராசிக்கு ஏழரை சனியின் இறுதி கட்டமான பாத சனி தொடங்குகிறது. இதன் காரணமாக கால்களில் உபாதைகள், தேவையற்ற பயணங்கள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். வங்கி இருப்பு கரையும். பண விரயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பேச்சில் நிதானம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கண் உபாதைகள் தோன்றி மறையும். பணவரவு இருக்கும் அதே சமயத்தில் செலவுகளும் உங்களை துரத்தும். ஏழரை சனியின் இறுதி பகுதி என்பதால் நிதானமாக செயல்பட்டால் பெரிய பாதிப்புகள் இன்றி தப்பிக்கலாம்.
சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாவதால் இது ஜென்ம சனி காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். வேலையில் கூடுதல் சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கலாம். மன அழுத்தம் கூடும். உடல் நலக் கோளாறுகள் தோன்றி மறையும். பேச்சில் நிதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழிலில் மந்த நிலை ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எடுப்பது நல்லது. கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தரும்.
இந்த காலகட்டத்தில் திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபடலாம். சனிக்கிழமைகளில் அருகில் உள்ள சிவாலயங்களில் நவகிரக சந்நிதியில் கருப்பு எள் துணியில் முடிந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். ஊனமுற்றவர்கள் அல்லது முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உணவு மற்றும் ஆடை தானம் செய்வது சனியின் அருளை பெற்றுத் தரும். ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)