
நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று சொல்லப்படும் குரு பகவான், வரும் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து உச்ச வீடான கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சி மற்ற ராசிகளை விட கடக ராசி அன்பர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். ஏனெனில், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச வீடான கடக ராசிக்குள் (சொந்த ராசி) நுழைகிறார்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஆனால், அந்த குரு பகவானே உங்கள் ராசிக்கு அதிபதியான சந்திரனின் வீட்டிற்கு வந்து, அங்கு அதீத பலத்துடன் உச்சம் பெற்று அமர்வது என்பது ராஜயோகத்தின் உச்சமாகும். கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த மன உளைச்சல்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உத்தியோக ரீதியான பின்னடைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக இந்த 2026 குரு பெயர்ச்சி அமையப்போகிறது.
எதையும் திட்டமிட்டுச் செயல்படும் குணமுடைய கடக ராசியினர், தாங்கள் வகுத்த திட்டங்களின் படி வெற்றிகளை அறுவடை செய்யப்போகும் ஆண்டாக இது அமையும். இந்த குரு பெயர்ச்சியில் மிக முக்கியமான பலனாகக் கருதப்படுவது புத்திர பாக்கியம் ஆகும். திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தைச் செல்வம் இல்லாமல் வருந்திக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு, இந்த ஆண்டு மகப்பேறு உண்டாகப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி... ராஜயோகத்தால் பணமழை கொட்டப்போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்?
அதேபோல், திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்குத் தகுந்த வரன் அமைந்து மனம்போல மாங்கல்ய பாக்கியம் கைகூடும். உங்கள் ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் வழுத்திருப்பதால், எதைச் செய்தாலும் அதில் ஒரு அதிர்ஷ்டமும், பாக்கியம் செய்தவர் என்று சொல்லத்தக்க முன்னேற்றங்களும் உண்டாகும். மேலும், புத்தி ஸ்தானம் மற்றும் புகழ் ஸ்தானம் வலுவாக இருப்பதால், உங்கள் அறிவுத்திறன் வெளிப்பட்டுச் சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
உறவுகள் மற்றும் திருமண பந்தம் மிகவும் இனிமையாக அமையும். பூர்வீகச் சொத்துக்கள் விஷயங்களில் உங்களுக்கு வரவேண்டிய உரிமைகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அவை இந்த பெயர்ச்சிக் காலத்தில் தடைகள் நீங்கி உங்கள் கைக்கு வந்து சேரும். எனவே, ஜென்ம குரு என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் கடக ராசியினருக்கு இது ஒரு பொற்காலமே.
குரு பகவானையே அதிபதியாகக் கொண்ட புனர்பூச நட்சத்திர அன்பர்களுக்கு, உங்கள் நட்சத்திர அதிபதியான குரு பகவானே உங்கள் ராசியில் வந்து உச்சம் பெறுவது தர்மகர்மாதிபதி யோகத்தைத் தரும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். இழந்த கௌரவம், பதவி மற்றும் செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த நீண்ட காலப் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். ஆன்மீக ஞானம் பெருகும். உயரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைப்பதன் மூலம் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். புதிய தொழில் தொடங்க இதுவே மிகச்சிறந்த நேரம். வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது கூடுதல் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சனி பகவானை அதிபதியாகக் கொண்ட பூச நட்சத்திர அன்பர்களே, உங்களுக்கு இந்த பெயர்ச்சி பொருளாதார ரீதியான பிரம்மாண்ட வளர்ச்சியைத் தரும். கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் இப்போது கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் திரும்ப கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் வரும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.
புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட ஆயில்ய நட்சத்திர அன்பர்களுக்கு, இந்த குரு பெயர்ச்சி உங்கள் அறிவாற்றலையும், நிர்வாகத் திறனையும் மெருகேற்றும். பேச்சாற்றால் மூலமாக மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள், குறிப்பாகத் திருமணப் பேச்சுவார்த்தைகள் மிக வேகமாகக் கைகூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மேலும், வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தகவல் தொடர்பு மற்றும் வியாபாரத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கொட்டும். புதன்கிழமை தோறும் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபட நன்மைகள் பெருகும்.
இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் ஜோதிடத் தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்புகளே ஆகும். இவை தனிநபரின் பிறந்த ஜாதகம், தசாபுத்தி மற்றும் கிரக நிலைகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடும். வாசகர்கள் இந்தத் தகவல்களைத் தங்களின் மேலான அறிவைப் பயன்படுத்திப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் மற்றும் பரிகாரங்களால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்தத் தளத்தின் நிர்வாகமோ அல்லது ஆசிரியரோ பொறுப்பேற்க மாட்டார்கள். ஒரு முக்கிய முடிவை எடுக்கும் முன் தகுந்த ஜோதிட நிபுணரை ஆலோசிப்பது சிறந்தது.