மர்ம முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்..! சொத்துக்காக மாமனாரே அடித்துக்கொன்றதாக மருமகள் பரபரப்பு புகார்..!

By Manikandan S R SFirst Published Oct 1, 2019, 3:28 PM IST
Highlights

சொத்துத்தகராறில் தனது கணவரை அவரது தந்தை கொலை செய்துவிட்டதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புல்லாக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் தங்கராஜ். வயது 29. இவருக்கும் கனவாய்புதுரைச் சேர்ந்த சாந்தி என்கிற பெண்ணிற்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ரோஹித்(5), பார்சித்(3) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் பிறந்து 45 நாட்களே ஆன பெண்குழந்தை ஒன்றும் இருக்கிறது.

தங்கராஜ் தனது தந்தை சிகாமணியிடம் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுத்து விடுமாறு கடந்த 6 மாதங்களாக கேட்டு வந்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் தங்கராஜ் தனது மனைவி சாந்தி மற்றும் குழந்தைகளை கனவாய்புதூரில் இருக்கும் தனது மாமியார் வீட்டில் விட்டிருக்கிறார். இரவு தூங்குவதற்கு மட்டும் புல்லாகுட்டையில் இருக்கும் அவரது வீட்டில் தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் சாந்தியிடம், நாளை வந்து அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதாக தங்கராஜ் தெரிவித்திருக்கிறார். ஆனால் சொன்னபடி தங்கராஜ் சாந்தியை அழைத்துச்செல்ல வராததால் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டிருக்கிறார். தங்கராஜ் அழைப்பை எடுக்காத நிலையில் வீட்டின் அருகில் இருப்பவர்களிடம் சாந்தி விசாரித்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் தங்கராஜ் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது தங்கராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சாந்தியுடன் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதையடுத்து அலறியடித்து வந்த சாந்தி கணவர் இறந்து கிடப்பதைப் பார்த்து கதறி துடித்தார்.

அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை தங்கராஜ் உடலை உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைக்க வந்தனர். அப்போது சாந்தி மற்றும் அவரது உறவினர்கள், தங்கராஜ் சாவில்  மர்மம் இருப்பதாக கூறி பிணத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறையினர் சாந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் சாந்தி தனது கணவர் அவரது தந்தை சிகாமணியிடம் பல நாட்களாக சொத்தில் பங்கு கேட்டு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்த நிலையில் தங்கராஜை தனது மாமனார் சிகாமணி அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாக சந்தேகம் தெரிவித்தார். தங்கராஜின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவரது மாமனார் சிகாமணி, தங்கராஜின் அண்ணன் சிவசக்தி, அவரது மனைவி சத்யா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை பிணத்தை வாங்க மாட்டோம் என்றும் இரவு 8 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாந்தியை சமாதானப்படுத்திய காவலர்கள் தங்கராஜின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர்.

click me!