
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே ஷாஜன்வா கிராமத்தில் மிகவும் வசதி படைத்த விவசாயி ஒருவர். இவருக்கு 25 வயதில் ஒரே மகன் உள்ளார். இவர் கோரக்பூர் தொழில் மேம்பாட்டு வாரியத்தின் தொழில் பிரிவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டனர்.
இதையடுத்து பெலியாபர் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து கடந்த நவம்பர் 28ம் தேதி வெகு விமர்சியாக திருமணம் நடைபெற்றது. நவம்பர் 29ம் தேதி மணமகள் தன் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி மணப்பெண்ணின் தந்தை தனது மகளை காண மணமகன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது புதுப்பெண் தனது தந்தையை அழைத்து தனியாக பேசினார். மணமகன் மருத்துவ ரீதியாக திருமண உறவுகளுக்கு தகுதியற்றவர் என்றும் நம்மை மாப்பிள்ளை வீட்டார் ஏமாற்றிவிட்டார் என்று கதறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் தந்தை தனது பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரிடம் கூட சொல்லாமல் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதனையடுத்து இரு குடும்பத்தினரும் பெலியாபரில் உள்ள பொதுவான உறவினர் வீட்டில் சந்தித்து பேசினர். அங்கு மணப்பெண்ணின் குடும்பத்தினர், மாப்பிள்ளை குடும்பத்தினர் பல விஷயங்களை தங்களிடம் மறைத்ததாக குற்றம் சாட்டினர். மேலும் இது மணமகனுக்கு 2வது திருமணம் என்பதையும் மறைத்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து கோரக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணமகன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவர் மருத்துவ ரீதியாக திருமண உறவுகளுக்கு தகுதி இல்லாதவர் என நிரூபிக்கப்பட்டது. அவர் தந்தையாக முடியாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மருத்துவ முடிவுகளை மணமகனின் தந்தை ஆரம்பத்தில் ஏற்க மறுத்து விட்டார். இந்த விவகாரம் காவல் நிலையம் சென்றது.
இதன் பின்னர் இந்த பிரச்னையில் சமரசம் ஏற்பட்டது. திருமண செலவுக்காக மணமகன் குடும்பத்தினர் செலவழித்த ரூ.7 லட்சம் பணம், அனைத்து பரிசுப் பொருட்களையும் திருப்பி தர வேண்டும் என மணமகள் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதேபோல் அந்த பெண் தற்போது விவாகரத்து கோரி உள்ளார். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 3 நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது.