அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்...! தொல். திருமாவளவன் வலியுறுத்தல்...!

By Asianet TamilFirst Published Aug 26, 2019, 10:11 AM IST
Highlights

புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களைக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் எனவும், தமிழக அரசே புரட்சியாளர் அம்பேத்கரின் வெண்கலச் சிலையை அந்த இடத்தில் நிறுவ வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். 

வேதாரண்யத்தில்  இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு எதிரில் இருந்த டாக்டர் அம்பேத்கர் திரு உருவச்சிலையை ஒரு தப்பினர் இடித்து தள்ளினர், இதனால் அங்கு பதற்கமான சூழல் நிலவி வருகிறது, அதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இந்த நிலையில் அம்பேத்கர் உருவச்சிலையை இடித்துத் தள்ளிய நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுடன், சிலை இருந்த அதே இடத்தில் அம்பேத்கரின் வெண்கலச் சிலையை தமிழக அரசு நிறுவ வேண்டும்  என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்,  அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் நிலையத்தின் எதிரே இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் உருவச்சிலையை சாதி பயங்கரவாதக் கும்பல் இடித்துத் தரைமட்டமாக்கி உள்ளது. காவல் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களைக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் எனவும், தமிழக அரசே புரட்சியாளர் அம்பேத்கரின் வெண்கலச் சிலையை அந்த இடத்தில் நிறுவ வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். 

சட்டம் ஒழுங்குக்கு சவால் விடுக்கும் விதத்திலும், தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்த சிலை உடைப்பில் ஈடுபட்ட சாதி பயங்கரவாதிகள் அங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கிப் படுகாயப்படுத்தியதோடு, வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். அந்த சாதி பயங்கரவாதிகளைத் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் . சமூகநீதிப் பூங்காவான தமிழகம், சாதிபயங்கரவாதிகளின் வேட்டைக்காடாக மாறிவிடாமல் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரலெழுப்பவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் அவ்வாறு அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!