பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான ஆர் ஜே வைஷ்ணவி, இளைஞர் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக வீடியோ ஆதாரங்களுடன் சமூகவலைதளத்தில் புகார் அளித்துள்ளார்
நடிகையை துரத்திய மர்ம நபர்
சென்னையில் நடைபயிற்ச்சிக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வந்ததாக கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவரும் பிரபல தொகுப்பாளருமான வைஷ்ணவி புகார் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் பல்வேறு சமூக கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்து வருவார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வீடியோ ஒன்றை பதிவிட்டு மர்ம இளைஞர் ஒருவரைப் பற்றி பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த இளைஞர் நீண்ட நேரம் தான் செல்லும் இடத்திற்கு தன் பின்னாலே வந்ததாக கூறியுள்ளார்.
புகார் தெரிவித்த நடிகை
இதனையடுத்து தனது வீடு அந்த மர்ம நபருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக 30 நிமிடங்களுக்கு மேல் சாலையிலேயே நின்றதாக தெரிவித்துள்ளார். தன் வளர்ப்பு நாயுடன் நடை பயிற்சி மேற்கொள்ளும் போது மிரட்டும் விதமாக பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போன் பேசுவது போல் அந்த மர்ம நபரை வீடியோ பதிவு செய்ததாக ஆர்.ஜே வைஷ்ணவி கூறியுள்ளார். இந்த புகாரை சென்னை காவல்துறை டிவிட்டர் பக்கத்திலும் டேக் செய்துள்ளார்
பாராட்டு தெரிவித்த போலீஸ்
வைஷ்ணவி தைரியமாக மர்ம நபர் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு புகார் அளித்ததற்கு காவல்துறை தரப்பில் இருந்தும் சமூக வலைதளம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்று நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் உதவி என்ற செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை காவல்துறை சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளது