
திருச்சியில் மாத தவணை தாமதாக கட்டியதால் தனியார் நிறுவன பைனான்ஸ் ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக 58 வயது நபர் நீதிமன்ற வாசலில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு நேற்று வந்த அந்த நபர், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, மண்ணை அவர்மேல் போட்டு தீயை அணைந்தனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபப்ட்டு, உடல் பாதி எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டந்த அவரை அருகே இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ்யில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுக்குறித்து வழக்குபதிவு செய்த திருச்சி கண்டோமென்ட் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணையில், திருச்சியில் உள்ள அண்ணாநகரில் வசித்து வரும் சேகரன் என்பதும் வயது 58 என்பதும் தெரியவந்துள்ளது. இவர் திருச்சி - பழைய தஞ்சாவூர் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்கிறார். பஜாஜ் நிறுவனத்திடம் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பரில் ரூ.7 இலட்சம் கடன் பெற்றுள்ளார்.
கடன் தவணையாக ரூ.20,810 மாதம் மாதம் செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதமாக கடன் தவணையை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளச்சலுக்கு ஆளான சேகரன் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதி செய்யப்பட்ட சேகரன், 80 % தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.