ஒரே நேரத்தில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை.. அடுத்தடுத்து சிக்கும் பாஜக நிர்வாகிகள்..!

By vinoth kumarFirst Published Aug 27, 2021, 4:41 PM IST
Highlights

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 16ம் தேதி போலீசார், வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வந்தனர். அதே நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் பார்த்தசாரதி மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

சென்னை கொடுங்கையூரில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஆந்திராவில் பதுங்கியிருந்த பெரம்பூர் மேற்கு மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் போச்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கட்சி நிகழ்ச்சிக்கு வரும் பெண் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் புகாரை விசாரிக்க கட்சி தலைமை மறுத்து விட்டதாகவும், சிலர் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயத்தில் சில பெண்கள் புகார் கொடுக்கவும் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (56). பெரம்பூர் மேற்கு மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வந்தார். இவர், தனது வீட்டின் அருகே வசிக்கும் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

அதன்பேரில், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 16ம் தேதி போலீசார், வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வந்தனர். அதே நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் பார்த்தசாரதி மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கட்சியில் இருந்து பார்த்தசாரதி நீக்கப்படுவதாக கடந்த 4ம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. இதனிடையே, புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவின்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து பார்த்தசாரதியின் செல்போன் சிக்னலை வைத்து அவரை தேடினர். அதில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  பார்த்தசாரதியை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் புகாரில் பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து சிக்கி வருவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!