மிச்சம் இருந்த ரூட்டு தலைகள் பிடிபட்டனர்... அதே பாத்ரூம், அதே வழுக்கல், அதே மாவு கட்டு!!

By sathish kFirst Published Jul 25, 2019, 3:53 PM IST
Highlights

சென்னையில் நேற்று முன்தினம் பேருந்தில்  கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ரூட்டு தல என்ற பதவிக்காக நடந்த மோதலில் கைதான சிலரைத் தவிர, மிச்சம் மீதி இருந்த ரூட்டு தலைகள் பிடிபட்டனர்.

சென்னையில் நேற்று முன்தினம் பேருந்தில்  கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ரூட்டு தல என்ற பதவிக்காக நடந்த மோதலில் கைதான சிலரைத் தவிர, மிச்சம் மீதி இருந்த ரூட்டு தலைகள் பிடிபட்டனர்.

நேற்று முன்தினம் சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காடு நோக்கிச் சென்ற பஸ்ஸில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கம் அருகே பஸ் வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்தப் பஸ்ஸை மறித்து நின்றனர். பேருந்து நின்றவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பட்டாக்கத்திகளுடன் பஸ்ஸில் ஏறினர்.

அந்தப் பேருந்திற்குள் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அந்தக் கத்தியால் தாக்க ஆரம்பித்தனர். பல மாணவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கி தெறித்து ஓடினர். அவர்களையும் விரட்டி விரட்டி வெட்டியது இந்த கும்பல். போலீசுக்கு தகவல் கிடைத்தது வருவதற்குள்  அந்தக் கும்பல் ஓடிவிட்டது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் அரிவாளுடன் ஒருவரை ஒருவர் வெட்டியும், தாக்கிக்கொண்டும் அராஜகம் செய்தனர். முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை உடைத்து கொண்டனர். ( நம்புங்க உண்மையாகவே வழுக்கி விழுந்து தான் கையை உடைத்துக்கொண்டனர் இந்த மாணவர்கள் என்ற போர்வையில் உலாவும் ரவுடிகள்).

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்னை பாரிமுனை பகுதியில் இருந்து பஸ்ஸில் வரும் மாணவர்களுக்கும் பூந்தமல்லியிலிருந்து பஸ்ஸில் வரும் மாணவர்களுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே மோதல் இருந்து வந்ததும் செவ்வாய்க் கிழமையன்று கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இரு தரப்பும் இது தொடர்பாக மோதிக்கொண்டதாகவும் தெரியவந்தது.

இதன் காரணமாகத்தான் பேருந்தில் வந்த ஒரு தரப்பு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். இருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்தில் இப்படித் தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களிலும் ஊடங்களிலும் ஒளிபரப்பானது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகள் உடைத்துக்கொண்ட நிலையில், மிச்சம் மீதி இருந்த ரூட்டு தலைகளை போலீசார் கைது செய்தனர். இவர்களும் அதே பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகளை உடைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் புகைப்படம் வெளியாகவில்லை என குறிப்பிடத்தக்கது.

click me!