பிரபல ரவுடி தலை துண்டாக்கி கொடூரமாக கொலை..! மர்ம கும்பல் வெறிச்செயல்..!

By Manikandan S R SFirst Published Nov 7, 2019, 11:12 AM IST
Highlights

புதுவை அருகே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் ரவுடி ஒருவர் தலை துண்டாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி அருகே இருக்கிறது அரியாங்குப்பம் கிராமம். இங்கிருக்கும் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் ஜிம் பாண்டியன்(25). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தினமும் அந்த பகுதியில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது. நேற்று இரவும் வழக்கம் போல அங்கு அமர்ந்திருந்தார். 

அப்போது மர்ம கும்பல் ஒன்று அங்கு வந்திருக்கிறது. ஜிம் பாண்டியனிடம் பேச்சு கொடுத்த அவர்கள் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். திடீரென கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பாண்டியனை தாக்க முயன்றிக்கிறார்கள். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அவரை விடாமல் துரத்திய அந்த மர்ம கும்பல் நாட்டு குண்டை எடுத்து வீசியிருக்கிறது. இதில் நிலைதடுமாறி பாண்டியன் கீழே விழுந்திருக்கிறார். இதையடுத்து கத்தி, அருவாள் போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டியது.

இதில் தலை துண்டாகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே  பாண்டியன் உயிரிழந்தார். அதன்பிறகு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள், ஜிம் பாண்டியனின் உடலை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் பிரபல ரவுடி தலை துண்டாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!