பிரபல ரவுடியை டாஸ்மாக் கடையில் வைத்து வெட்டிப் படுகொலை...!

By vinoth kumarFirst Published Mar 25, 2019, 1:13 PM IST
Highlights

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடியை டாஸ்மாக் கடையில் வைத்து 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடியை டாஸ்மாக் கடையில் வைத்து 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, படப்பை, விவேகாந்த நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்கிற படப்பை பாஸ்கர் (38). பிரபல ரவுடி. இவன் மீது, கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற பாஸ்கர், மதுபாட்டில் வாங்கிக் கொண்டிருந்தார்.  

அப்போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் முகத்தை துணியால் மறைத்து பாஸ்கரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதனை கண்ட குடிமகன் அங்கிருந்து சிதறி ஓடினர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் பாஸ்கர், சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி பங்க் குமாரின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீது மாம்பலம், குமரன்நகர், ஒரகடம், பள்ளிக்கரணை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 கொலை வழக்குகள் உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு பங்க் குமாரை போலீசார் சுட்டு கொன்றனர். இதனையடுத்து, அவரது கூட்டாளிகள் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பியோடி தலைமறைவாகினர். 

இந்நிலையில் பங்க் குமாரின் நெருங்கிய கூட்டாளியான பாஸ்கர் படப்பையில் தஞ்சம் அடைந்தார். மேலும் பாஸ்கர் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பணம் பறித்து ரவுடியாக சுற்றி வந்துள்ளார். மேலும் கூலிப்படையாகவும் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த ஆண்டு தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மாம்பலத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். எனவே முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றிக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

click me!