ஒரு நாள் திருடாவிட்டாலும் தூக்கம் வராது...!! இரவு நேரத்தில் கைவரிசை காட்டி வந்த பலே ஆசாமி..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 9, 2019, 5:11 PM IST
Highlights

பகல் முழுவதும் பேருந்திலேயே பல இடங்களுக்கு பயணிப்பதும் பேருந்திலேயே தூங்குவதாகவும்,  இரவில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து வீடு புகுந்து கொள்ளை அடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார் 

ஒரேயொருநாள் திருடாவிட்டாலும்  அன்று தனக்குத் தூக்கம் வராது என பலே கொள்ளையன்  அளித்துள்ள வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கைவரிசையை காட்டி வந்த கொள்ளையனை  போலீசார் கைது செய்துள்ளனர்.  போலீஸ் கைதுக்குப் பின்னர் அந்த நபர் இவ்வாறு கூறியுள்ளார் .  

 சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர் ,  அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.  பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று அந்நபரை போலீசார் விசாரித்தனர் அப்போது அவர் ஓமலூரை சேர்ந்த அய்யாதுரை என்பதும்  கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்து நாற்பது நாட்கள் ஆனதும் தெரியவந்தது .  வந்த 40 நாட்களில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டதும்  தெரியவந்தது .  இந்நிலையில் அய்யாதுரையிடம் இருந்து  ஆறு இரு சக்கர வாகனங்கள்,  வெண்கலத்தால் ஆன ஒரு முருகன்  சிலை ,  10 சவரன் நகை , 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர் . 

இந்த நபர் ஒரே இடத்தில் தங்காமல் பகல் முழுவதும் பேருந்திலேயே பல இடங்களுக்கு பயணிப்பதும் பேருந்திலேயே தூங்குவதாகவும்,  இரவில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து வீடு புகுந்து கொள்ளை அடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது .  கடந்த 30 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த தான் ஒரே ஒரு நாள் கூட திருடாமல் இருந்ததில்லை என்றும் ,  திருடவில்லை என்றால் அன்று  தனக்குத் தூக்கம் வராது என்றும் அய்யாதுரை கூறியது  போலீசாரை திகிலடைய  வைத்தது. 
 

click me!