பரபரப்பை உண்டாக்கிய திருச்சி நகைக்கொள்ளை சம்பவம்..! மேலும் ஒரு முக்கிய குற்றவாளி திருவாரூரில் அதிரடி கைது..!

By Manikandan S R SFirst Published Oct 6, 2019, 12:42 PM IST
Highlights

திருச்சி நகை கடை கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் லலிதா ஜுவல்லரி கடையில் கடந்த 2 ம் தேதி அதிகாலை கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கிருந்து 30 கிலோ எடை கொண்ட சுமார் 12 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிளில் காவலர்களை கண்டு ஓடுவதைப் பார்த்ததும் அவரை விரட்டி சென்று பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் 4 கிலோ 250 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருந்தது. அவை அனைத்தும் லலிதா ஜுவல்லரி கடையில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்து நடத்திய விசாரணையில் திருவாரூரைச் சேர்ந்த முருகன் அவரது அக்காள் மகன் சுரேஷ் உட்பட இந்த திருட்டு சம்பவத்தில் 8 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் கொள்ளையடித்த நகைகளை பங்கு வைத்து திரும்பும்போது மணிகண்டன் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார்.

இதையடுத்து சுரேஷ் என்பவரை பிடிக்க திருவாரூரில் இருக்கும்  வீட்டிற்கு காவலர்கள் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. அவரது தாய் கனகவல்லியிடம் விசாரித்தபோது கொள்ளை அடித்த நகைகளில் 450 கிராம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மணிகண்டன் மற்றும் கனகவல்லி இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தப்பியோடிய சுரேஷ் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.


இந்தநிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முரளி என்பவரை திருவாரூர் பகுதியில் வைத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முருகனின் அண்ணன் மகன் ஆவார். அவரை சிறையில் அடைத்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கொள்ளை சம்பவம் பற்றிய மேலும் பல முக்கிய தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!