மனைவியை எரித்துக்கொன்று விட்டு நர்சிங் மாணவியுடன் ஓட்டம்பிடித்த கணவன்… பொய் வீடியோ வெளியிட்டது அம்பலம்..!

By manimegalai aFirst Published Sep 28, 2021, 1:12 PM IST
Highlights

மனைவிக்கு பாலில் மயக்க மருந்து கலந்துகொடுத்த சத்தியமூர்த்தி, அவர் மயங்கிய பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துவிட்டு தப்பினான்.

மனைவிக்கு பாலில் மயக்க மருந்து கலந்துகொடுத்த சத்தியமூர்த்தி, அவர் மயங்கிய பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துவிட்டு தப்பினான்.

திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு வர்ஷினி என்கிற பெண் குழந்தை உள்ளது. கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் திவ்யா தமது தாயார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 25-ம் தேதி மனைவியை பார்க்கச் சென்ற சத்தியமூர்த்தி, அவரை கோவிலுக்கு அழைத்துள்ளார்.

கணவரை நம்பி உடன் சென்ற திவ்யாவுக்கு, பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்த சத்தியமூர்த்தி, அவர் மயங்கியதும் எலவம்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகே தூக்கி சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். உடல் முழுவதும் தீயுடன் அங்கும் இங்கும் ஓடிய திவ்யாவை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் திருப்பத்தூர் மருத்துவமனையில் திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே மனைவி கொலை குறித்து உறவினர்களுக்கு வாட்ஸாப் மூலம் வீடியோ பதிவு ஒன்றை சத்தியமூர்த்தி அனுப்பியிருந்தார். அதில், தமக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. எங்களால் இனி வாழ முடியாது என்பதால்  மனைவியை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். என்னை தேடாதீர்கள் என்று கூறிவிட்டு மாயமானார். சத்தியமூர்த்தியை போலீஸ் தேடிவரும் நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியைக் கொன்ற சத்தியமூர்த்தியுடன் போரூரில் நர்சிங் படித்துவந்த 20 வயது மாணவியும் மாயமாகி உள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துளார். இதையடுத்து சத்தியமூர்த்தி தப்பிச் சென்ற காரை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மனைவியை எரித்துக்கொன்று சிறுநீரகம் செயழிலந்து விட்டதாக நாடகமாடிய கணவன், கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்துள்ளதால் அது திட்டமிட்ட கொலை என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

click me!