மனைவியை கொலை செய்த நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இருக்கும் கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளை பெரியன். வயது 27. இவரது மனைவி அபிநயா(23). சில வருடங்களுக்கு முன்பு திருமணமான இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் வெள்ளை பெரியன் வசிக்கும் அதே பகுதியில் இருக்கும் வலசையைச் சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கும் அபிநயாவிற்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் நட்பாக பழகியவர்கள் நாளடைவில் நெருங்கிப்பழகி பின் கள்ளக்காதலில் ஈடுபட்டனர். இந்த விஷயம் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த வெள்ளைபெரியன் தனது மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் அபிநயா அதைக் கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 10ம் தேதி வெள்ளைபெரியன் தனது மனைவி அபிநயா உடன் மோட்டார் சைக்கிளில் வலசைக்கு சென்றார். அங்கிருக்கும் ஒரு தோட்டத்தில் வைத்து ராம்குமார் உடன் இருக்கும் கள்ளத்தொடர்பை கைவிட்டு விடுமாறும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளுமாறும் அபிநயாவிடம் கூறி இருக்கிறார். ஆனால் அபிநயா ராம்குமார் உடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த வெள்ளை பிரியன் அபிநயாவை அங்கிருக்கும் கிணற்றில் தள்ளி கொலை செய்து இருக்கிறார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து வெள்ளைபெரியனை சிறையில் அடைத்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளை பிரியன் கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கிறார். காதல் மனைவியின் தவறான நடத்தை காரணமாக தனது குழந்தைகள் அனாதையாகி விட்டனரே என்று வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவில் சிறையிலிருக்கும் கழிவறையில் தனது கைலியால் வெள்ளைபெரியன் தூக்கிட்டு உள்ளார். தூக்கில் தொங்கிய அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிறை காவலர்கள் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெள்ளைபெரியன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.