லாட்டரி மார்ட்டினுக்கு சிக்கல் மேல் சிக்கல் !! கல்லூரி காசாளர் மர்ம மரணம் !!

By Selvanayagam PFirst Published May 3, 2019, 11:06 PM IST
Highlights

லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணியாற்றி வந்த  பழனி என்பவர்  காரமடை அருகே உள்ள குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை பகுதியில் வசித்து வருபவர் பழனி . இவர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள்,வீடுகள், ரிசார்ட்டுகளில் என  பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. அதேபோல மார்ட்டின் நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகத்தினருடன் தொடர்புடைய முக்கிய நபர்களிடமும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டது. 

இதில் குறிப்பாக கவுண்டம்பாளையம் அருகே உள்ள  ஹோமியோபதி கல்லூரியில் பல்வேறு தரப்பினரிடம் வருமானவரித்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில் காசாளர் பழனியை தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று பழனியை விசாரணைகள் முடிந்து வருமான வரித்துறையினர் விடுவித்தனர்.இதைனையடுத்து  இன்று காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

வருமான வரித்துறையினர் சோதனை யில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் காசாளர் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!