விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தொடர்ந்து கள்ள லாட்டரி சீட்டுகளை வாங்கயதால் ஏற்பட்ட கடன் காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் சித்தேரி கரையை சேர்ந்தவர் அருள் நகை தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு பிரியதர்ஷினி, யுவஸ்ரீ , மற்றும் 3 மாத கைக்குழந்தையான பாரதி என்று 3 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டில் தற்கொலை செய்து இறந்து கிடந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது நகை தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடு சாப்பிட்டு அவர்கள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அருள் தொடர்ந்து விழுப்புரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் 3 லாட்டரி எனும் லாட்டரியை வாங்கியதால் கடனுக்கு ஆளானதாகவும், கடன் தொல்லை பொறுக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்த கொண்தாகவும் தெரிகிறது.
இறந்த 5 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.