
சென்னை, செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இந்த சிறுமியின் தந்தை லாரி டிரைவராக உள்ளார். இவரது தாய் பிரிந்து சென்று விட்டார். அண்ணன் மற்றும் பாட்டியுடன் வசித்து வரும் சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது அண்ணன் வெளியே சென்ற சமயம் பார்த்து, மாணவி வீட்டில் 5 பேர் கொண்ட போதை கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
5 பேர் கொண்ட கும்பல் :
அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த இந்த கும்பலின் கொடுமை தாங்காமல், பாதிக்கப்பட்ட அந்த மாணவி அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவி கொடுத்துள்ள புகாரில், 'குடிப்பழக்கம் கொண்ட எனது தந்தை அடிக்கடி வீட்டுக்கு வர மாட்டார். தாயும் வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் எனது அண்ணன்தான் என்னை படிக்க வைத்துவருகிறார். இந்த நிலையில் போதையில் வீட்டுக்கு வந்த 5 பேர் எனது அண்ணனை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.
இதனால் அவன் திருத்தணியில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சென்று விட்டான். அதனால் நான் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட 5 பேரும் கடந்த மாதம் 8-ந்தேதி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டுக்குள் வந்தனர். தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி 5 பேரும் என்னிடம் மிகவும் தகாத முறையில் நடந்து கொண்டனர். இதன் பிறகு கடந்த 2 மாதங்களாக அந்த கும்பல் அடிக்கடி வீட்டுக்குள் இரவு நேரத்தில் வந்து தாங்க முடியாத அளவுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். 5 பேரும் என்னை கட்டிலில் தள்ளி விட்டு பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தனர்.
மீண்டும் ஒரு பாலியல் சம்பவம் :
அவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. நாங்கள் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டி வருகிறது. எனவே என்னைபாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொண்டிருக்கும் 5 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அந்த சிறுமியிடம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் விசாரணை நடத்தியது. இதில், அச்சிறுமிக்கு அக்கும்பல் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.