வீரத்தம்பதிகள் விரட்டியடித்த கொள்ளையனை பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..! அதிர்ச்சியில் ஊர் மக்கள்..!

By Manikandan S R SFirst Published Oct 5, 2019, 3:38 PM IST
Highlights

நெல்லை அருகே இரவில் கொள்ளையடிக்க வந்த திருடர்களை முதியவர்கள் அடித்து விரட்டிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கிறது கல்யாணிபுரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி செந்தாமரை. இருவரும் தங்கள் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 11 ம் தேதி இரவில் வீடு வாசலில் சண்முகவேல் அமர்ந்திருந்த போது கொள்ளையர்கள் புகுந்தனர். அதை பார்த்து அதிர்ச்சியுற்ற அவர் அவர்களுடன் சண்டையிட்டார். சத்தம் கேட்டு வந்த செந்தாமரையும் கணவருடன் சேர்ந்து கொள்ளையர்களை எதிர்த்து வீரமாக சண்டையிட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இதுதொடர்பான காட்சிகள் பலத்த பாராட்டை பெற்றது. சுதந்திர தின விழாவில் இந்த வீரத்தம்பதியினருக்கு முதல்வர் விருது வழங்கி பாராட்டினார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தற்போது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளாக பெருமாள் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம்  தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கைதாகி இருக்கும் பெருமாளை பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவர் அந்த பகுதியின் பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார். மேலும் வழக்கை விசாரணை செய்து வரும் காவல்துறை உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமியின் நெருங்கிய உறவினர் பெருமாள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை  சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியவரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அந்த பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன்மூலம் இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!