உத்தரப்பிரதேசத்தில் பெண் காவலர் ஒருவர் உள்ளூர் தாதாவை திருமணம் செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த பாயல் என்ற பெண் காவலர் சுராஜ்பூர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தபோது அங்கு கொலை குற்றவாளியாக ஆஜரான ராகுல் தரசனா என்பவரை சந்தித்துள்ளார். பின் ராகுல் சிறையில் இருந்தபோதும், வெளியில் இருந்தபோதும் இருவரும் தொடர்பிலேயே இருந்துள்ளனர். பார்த்த நொடியில் இருந்து இருவரும் காதலித்து வந்தாலும் அதை வெளியில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ராகுலும், பாயலும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படத்தை ராகுல் சமூக வலைதளங்களில் பதிவிட அதைப் பார்த்து அந்தப் பகுதி காவல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபற்றி பேசியுள்ள காவல் துறையினர் ‘இந்தத் திருமணம் வெளிப்படையாக மாநில காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருமணம் நடந்தது உண்மையா? ராகுல் செய்த குற்றங்களில் பாயலுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? எனவும் விசாரணை நடத்தவுள்ளோம். பாயல்மீது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது” எனக் கூறியுள்ளனர்.