பெண் டாக்டரை எரித்து கொன்ற 4 பேர் என்கவுன்டர்... உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Dec 21, 2019, 1:55 PM IST
Highlights

ஐதராபாத் அரசு காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அந்த 4 பேரின் உடலை மறுபிரேதபரிசோதனை நடத்த தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தெலங்கானாவில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தெல்தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 27 வயதான கால்நடை பெண் மருத்துவர், பணி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்மநபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாத் அருகே எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது ஆரிஃப், நவீன், சிவா, சென்னக்கேசவலு ஆகிய 4 பேரும் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, குற்றம் சாட்டப் பட்டவர்களில் 2 பேர் போலீசாரின் துப்பாக்கியை எடுத்து தாக்குதல் நடத்தியதால் அவர்கள் 4 பேரையும் சுட்டு வீழ்த்தியதாக காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்திருந்தார்.  என்கவுன்டர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு தெலங்கானா மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், இது தொடர்பாக காவல் அதிகாரிகளின் சிறப்பு குழுவினர் விசாரணை நடத்துவார்கள் என தெலங்கனா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தெலங்கானா என்கவுன்டர் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத் அரசு காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அந்த 4 பேரின் உடலை மறுபிரேதபரிசோதனை நடத்த தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

click me!