வரதட்ணை கொடுமை... காதல் திருமணம் செய்த மனைவி 2 மாதத்தில் உயிரோடு எரித்து கொலை..!

By vinoth kumarFirst Published Aug 12, 2020, 4:53 PM IST
Highlights

விழுப்புரத்தில் காதல் திருமணம் செய்த மனைவியை 2 மாதத்தில் வரதட்ணை கொடுமையால் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விழுப்புரத்தில் காதல் திருமணம் செய்த மனைவியை 2 மாதத்தில் வரதட்ணை கொடுமையால் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா நைனார்பாளையத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகள் ராஜேஸ்வரி (18). இவர், திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் வி.பரங்கினி கிராமத்தை சேர்ந்த துரை என்பவரின் மகனான துளசிங்கம் என்கிற ஜீவாவும் (19) படித்து வந்தார். ஒரே கல்லூரி இருவரும் படித்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 

இதனையடுத்து, பெற்றோர்கள் சம்மதத்துடன்  ராஜேஸ்வரிக்கும், துளசிங்கத்திற்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்கள் மட்டுமே இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், துளசிங்கத்திற்கு திடீரென வரதட்சணை மீது ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர், தனது காதல் மனைவி ராஜேஸ்வரியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து நகை, பணம் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ராஜேஸ்வரி கதறியபடி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த துளசிங்கம், ராஜேஸ்வரி மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. இதனையடுத்து, ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வரதட்ணை கொடுமை, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து துளசிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் கல்லூரி மாணவி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!