ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் முகாந்திரம் இல்லை... வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

By Thiraviaraj RMFirst Published May 6, 2019, 5:37 PM IST
Highlights

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்வதாக, மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அறிவித்துள்ளது.
 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்வதாக, மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் பணியாளர் ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாணப் பத்திரம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கூடியது. அப்போது, இந்தப் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வருத்தம் தெரிவித்து இருந்தார். இதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிபதி பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்படுவதாக, மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற விசாரணை குழு அறிக்கையில், தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் முகாந்திரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த விசாரணை குழுவின் அறிக்கை விபரங்கள் வெளியுலகிற்கு தெரிவிக்கப்படாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

click me!