அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததில் தடுமாறி விழுந்த பெண் !! பின்னால் வந்த லாரி மோதி படுகாயம் !! மீண்டும் ஒரு சுபஸ்ரீ சம்பவமா ?

By Selvanayagam PFirst Published Nov 12, 2019, 10:14 AM IST
Highlights

கோவை சிங்காநல்லூரில்  சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் மீது மோதிய லாரி  அவர் படுகாயமடைந்தார்.
 

சென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார்  இதைத் தொடா்ந்து விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடா்ந்து விளம்பரப் பதாகைகள் வைக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் குறைந்தன.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர்  வருகையை ஒட்டி அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. 

அப்போது அந்த வழியாக இளம் பெண் ஒருவா் இருசக்கர வாகனத்தில் நேற்று  காலை வந்துள்ளார்  அப்போது சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்துள்ளது. இதைக் கண்ட அவா், வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அவரது பின்னால் வந்த லாரி மோதியதில் அவரது இரு கால்களும் நசுங்கின. லாரியும் கட்டுப்பாட்டை இழந்து மற்றோரு  இருசக்கர வாகனத்தில் மோதியதில் நித்யானந்தம் என்ற இளைஞா் காயமடைந்தார்

இதனையடுத்து சாலையில் மயக்கமடைந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனா். இளைஞா் நித்யானந்தம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

காயமடைந்த பெண்ணுக்கு இரு கால்களிலும் நரம்புகள் சேதமடைந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!