பாலியல் புகாரில் சிக்கிய கயவர்களுக்கு சரியான சவுக்கடி... தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாய்ந்தது குண்டாஸ்!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 27, 2021, 10:55 AM IST
Highlights

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நாகராஜன் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
 

சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் , நாகராஜன் "பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி"என்ற தடகள பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். தடகள பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 29ம் தேதி சிறையில் அடைந்தனர். தற்போது வரை ஆறு வீராங்கனைகள் எழுத்துப்பூர்வமாக தங்களுக்கும் நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த ஆறு பேரில் இரண்டு வீராங்கனைகள் வெளிநாட்டில் இருப்பதாகவும் நாகராஜன் கைது குறித்து கேள்விப்பட்ட அவர்கள் இருவரும் எழுத்துபூர்வமாக நாகராஜன் மீது புகார் அளித்துள்ளனர். நாகராஜனிடம் பயிற்சி பெறும்போது தேசிய அளவில் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தயார்படுத்த வேண்டும் என்றால் தனக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக வீராங்கனைகள் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

​தமிழகத்தில் பள்ளி, பயிற்சி அகடாமி என அடுத்தடுத்து புகார்கள் குவிந்ததை அடுத்து, கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. எனவே இரு தினங்களுக்கு முன்பு பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நாகராஜன் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
 

click me!