அரியலூரில் அரங்கேறிய பயங்கரம்... மின்வேலியில் சிக்கி இறந்தவரின் உடலை துண்டாக்கி மறைத்து வைத்த கொடுமை...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 1, 2021, 1:50 PM IST
Highlights

4 நாட்களுக்குப் பின்னர் சவரிமுத்துவின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டிய மிராசுதார், அதனை 2 சாக்குப்பைகளில் கட்டி கொள்ளிடத்தில் வீச திட்டம் தீட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டம் சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சவரிமுத்து. இவருக்கு ஜெசிந்தாமேரி என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். சவரிமுத்து கடந்த 18ம் தேதி இரவு தன்னுடைய வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலை வரை வீடு திரும்பாதததும், செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததும் அவருடைய குடும்பத்தினரை பதற்றமடைய வைத்தது. இதையடுத்து சவரிமுத்து குத்தகைக்கு எடுத்திருந்த நெல் வயலுக்குச் சென்று பார்த்துள்ளனர், அங்கு அவருடைய செருப்பு மற்றும் இருசக்கர வாகனம் இருப்பது கண்டு அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து திருமானூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 

சவரிமுத்துவை தேடி விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு திடுக்கிடும் அதிர்ச்சி காத்திருந்தது. பக்கத்து வயலில் பயிர்களை பன்றிகளிடம் இருந்து காப்பதற்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சவரிமுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில், மின்வேலி வைத்த வயலைச் சேர்ந்த மிராசுதார் சவரிமுத்துவின் பிணத்தை முதலில் மறைத்து வைத்துள்ளார். 

4 நாட்களுக்குப் பின்னர் சவரிமுத்துவின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டிய மிராசுதார், அதனை 2 சாக்குப்பைகளில் கட்டி கொள்ளிடத்தில் வீச திட்டம் தீட்டியுள்ளார். அப்போது கிராம மக்கள் சவரிமுத்துவை தேடி வந்த நிலையில் பிணத்தை மற்றொருவர் கரும்பு கொல்லையில் மறைத்து வைத்துள்ளார். இச்சம்பவங்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்த நிலையில், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  கொலை தொடர்பாக முருகேசன் மற்றும் அவருக்கு உதவிய கணேசன், சாமிதுரை ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

click me!